பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

என் சரித்திரம்

நான் பிறந்த பிறகு ஐந்து மாதங்கள் என் அன்னையார் சூரியமூலையில் இருந்தனர். பிறகு என் பாட்டனார் என் அன்னையாரையும் என்னையும் அரியிலூருக்குக் கொணர்ந்து வந்து விட்டுச் சென்றனர். எங்களுக்காகப் புதிதாகக் கட்டப்பெற்ற வீட்டில் நான் என் தாயாருடன் புகுந்தேன்.

ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தையை அதிர்ஷ்டசாலி யென்று கருதுவது வழக்கம். தங்களுக்குக் கிடைத்த லாபங்களெல்லாம் அக்குழந்தையின் அதிர்ஷ்ட பலனாகவே பாராட்டுவர். என்னுடைய அன்னையாரும் அவ்வாறு சொல்லுவதுண்டு. நான் பிறந்த வருஷத்தில் எங்களுக்கென்று அரியிலூரில் ஒரு வீடு ஏற்பட்டது என் அதிர்ஷ்டத்தின் பலனென்றே நம்பினார். அது மட்டுமன்று; அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு சந்நியாசி இறந்து போகும்போது, “ஆனந்த வருஷத்தில் இங்கே ஓர் அதிசயம் நடக்கப் போகிறது; அதைக் காணாமல் போகிறேன்” என்று சொல்லி உயிர் நீத்தாராம். இந்த நாட்டிற்கு முதல் முதலாக ரெயிலும் தந்தியும் வந்தமையே அவர் கூறிய அதிசயம் என்று எல்லோரும் கூறினார்கள். அந்த அதிசயம் நிகழ்ந்த வருஷத்தில் நான் பிறந்ததும் ஒர் அதிசயமென்றே என் தாயாரின் உள்ளத்துள் ஒரு சந்தோஷ உணர்ச்சி உண்டாகி யிருக்கக்கூடும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. “இப்படி ஒரு சந்நியாசி சொன்னராம். அந்த வருஷத்தில்தான் நீ பிறந்தாய்” என்று பிற்காலத்தில் பலமுறை என் அருமை அன்னையார் அன்புடன் கூறியிருக்கிறார்.

அத்தியாயம்—9

குழந்தைப் பருவம்

ரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 ரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது.

இல்லற தர்மத்தை மேற்கொண்ட பிறகு அவருக்குக் குடும்ப பாரம் அதிகமாயிற்று. ‘குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கையில் பழங்கடனைத் தீர்ப்பதற்கு