பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது பிறப்பு

45

அவரைத் திருக்குன்றத்து ஐயரென்றே பெரும்பாலோர் வழங்கி வந்தனர். சங்கீத வித்தையினால் ஒருவாறு காலக்ஷேபம் செய்யலாம் என்ற தைரியம் தந்தையாருக்கு இருந்து வந்தது.

அரியிலூரில் இருந்தபோது அவ்வூர் ஜமீன்தார் எந்தையாரை மரியாதையோடு ஆதரித்து வந்தார். அந்த ஜமீனைச் சேர்ந்த இலந்தங்குழி என்னும் கிராமத்தில் பத்துக்காணி நிலம் அவருக்கு ஸர்வமானியமாக அளிக்கப்பட்டது. ஒவ்வொரு காணிக்கும் வருஷம் ஒன்றுக்கு ஐந்து ரூபாயாக ஐம்பது ரூபாய் வரும்படி கிடைத்தது. அதைக் கொண்டும், இடையிடையே அன்பர்களிடமிருந்து கிடைக்கும் உதவியைக் கொண்டும் அரியிலூரில் திருப்தியாக என் தந்தையார் வாழ்ந்து வந்தார். அரண்மனை உத்தியோகஸ்தர்களுடைய அன்பையும் அந்த ஆஸ்தானத்துச் சங்கீத வித்துவானும் தமிழ் வித்துவானுமாக இருந்த சடகோப ஐயங்காரென்பவருடைய பிரீதியையும் அவர் பெற்றார். அந்த உத்தியோகஸ்தர்களாகிய கார்காத்த வேளாளச் செல்வர்களும் வேறு சிலரும் அவரை ஸ்திரமாகவே அவ்வூரில் இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணி, பெருமாள் கோயில் சந்நிதி வீதியில் வட சிறகின் கீழ் கோடியில் அனுமந்தராயன் கோயிலுக்கு வடக்கே ஒரு கூரை வீடு கட்டிக் கொடுத்தனர். இது சென்ற ஆனந்த வருஷத்திற்கு முந்திய ஆனந்த வருஷம் நிகழ்ந்தது (1854).

உத்தமதானபுரத்தில் என் தந்தையாருக்கு ஸீமந்தம் நடைபெற்ற பிறகு என் மாதாமகர் என் தாயாரைத் தம் ஊராகிய சூரியமூலைக்கு ஒரு நல்ல தினம் பார்த்து அழைத்துச் சென்றனர். அங்கே ஆனந்த வருஷம் மாசி மாதம் 9-ஆம் தேதி திங்கட்கிழமை (19-2-1855) இரவு நான் பிறந்தேன். என் ஜாதகம் வருமாறு:

ஆனந்த ௵ மாசி ௴ 9-ஆம் ௳ திங்கட்கிழமை; திரிதியை 35, உத்திரட்டாதி 39½ சாத்யநாம யோகம் 26½, தைதுலாகரணம் 16½, திவி 5¼, இந்தச் சுபதினத்தில் ராத்திரி 5½ நாழிகையளவில் கன்னியா லக்கினத்தில் சுப ஜனனம்.