பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710

என் சரித்திரம்

நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? துக்க உணர்ச்சியோடு சில பாடல்களை எழுதினேன். அவற்றுட் சில வருமாறு:—


“என்புடையா ரன்புடைய இராமசா மிக்குரிசில்
உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை யுன்னியுன்னி
அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி காணாராய்த்
துன்புடையா ராகிமனஞ் சோர்ந்திடவெங் ககன்றனையே!”

[என்புடை-என்னிடத்தில்]


“இன்றேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக்
குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குற்றத்துள்
ஒன்றேனும் உனையணுக ஒண்ணாதோ சார்ந்திருப்பின்
என்றேனும் நிற்பிரிதல் எம்மை வருத்திடுமோ!”

[இன் தேனும், நிற்பிரிதல் - உன்னைப்பிரிதல்.]


“ஊர்க்குழைப்பான் போனானென் றுலைவாரும் போனானிப்
பார்க்குழைப்பா னென்று பதைப்பாருந் தமிழெனுமுந்
நீர்க்குழைப்பா னென்றுருகி நிற்பாரு மாய்க்கலங்க
ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!”

[உலைவார் - வருந்துவார். தமிழெனும் முந்நீர் - தமிழென்னும் கடல். அளி - அன்பு.]

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டையும் புத்தக வடிவத்திற் பார்க்க வேண்டுமென்று முதலியார் எவ்வளவோ ஆவலோடிருந்தார். அவர் இருந்த காலத்தில் அவ்விரண்டையும் நிறைவேற்றும் பேறு எனக்கு இல்லாமற் போயிற்று.

இடையில் ஓய்வு கிடைத்த காலத்தில் சென்னைக்குச் சென்று வருவேன். 1892-ம் வருஷம் கோடை விடுமுறையில் அங்கே போயிருந்தபோது, திருமானூர்க் கிருஷ்ணையர் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தமையால் அவருக்கு விடை கொடுத்தனுப்பி விட்டேன். திருவழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியரும் தில்லைவிடங்கன் வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளையும், மில்லர் காலேஜிலிருந்த சுப்பராயலு நாயடு என்பவரும் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள். சுறுசுறுப்பும் கூர்மையான அறிவும் உள்ள வை. மு. சடகோப ராமானுஜாசாரியர் பெரும்பாலும் என்னுடன் இருந்து ஒப்பிட்டுப் பார்த்தல் முதலிய உதவிகளையெல்லாம் செய்து வந்தார்.