பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகார வெளியீடு

713

சனிக்கிழமையன்று சிலப்பதிகாரத்தில் எஞ்சியிருந்த பகுதிகளெல்லாம் அச்சாயின. ஞாயிறன்று இரவு பைண்டு பண்ணின பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

சிலப்பதிகாரப் புத்தகங்கள் பைண்டாகிச் சென்னையிலிருந்து வந்தவுடன் அனுப்ப வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பினேன். அதனைக் கண்ட அன்பர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதினார்கள் இராமநாதபுரம் ராஜா மு. பாஸ்கர சேதுபதியவர்களுக்கும் பிரதிகள் அனுப்பினேன். அவர் புத்தகம் கிடைத்த விவரத்தைத் தெரிவித்ததோடு தக்க சந்தர்ப்பமொன்றில் என்னை இராமநாதபுரத்துக்கு அழைக்க நேருமென்றும், அப்போது தவறாமல் வர வேண்டுமென்றும் எழுதினார்.

சரித்திரச் செய்திகள்

சீவகசிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.

சிலப்பதிகாரம் மிக அரிய சரித்திரச் செய்திகளை உடையது. தமிழ் நாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வட நாடு சென்று வடவேந்தர்களை வென்று கண்ணகியின் படிமச்சிலை கொணர்ந்த செய்தி மிக்க விம்மிதத்தை உண்டாக்கியது. அன்றியும், சங்க காலத்தை நிர்ணயிப்பதற்குச் சிலப்பதிகாரம் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியில்வல்ல பலருடைய கவனத்தை அந்நூல் கவர்ந்தது.

அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்த வேறு நூல்கள் தமிழன்பர்களுடைய அறிவுக்கு விருந்தாயின. இதனை எதிர்பார்த்தே அவருரையிற் கண்ட நூல்களைப் பற்றிய குறிப்புக்களைத் தனியே தொகுத்து வெளியிட்டிருந்தேன்.

பெருங்கதை

அவ்வுரையினால் நான் அறிந்த பல செய்திகளுள் முக்கியமானது பெருங்கதை என்னும் நூலின் சிறப்பாகும். நான் தேடித்