பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறநானூற்று ஆராய்ச்சி

729

‘துஞ்சிய’ என்னும் சொல்

அவருக்கும் சில விஷயங்களை விளக்க வேண்டுமென்று எழுதினேன். முக்கியமாகப் புறநானூற்றிலுள்ள அரசர் பெயர்களில் வரும் ‘துஞ்சிய’ என்னும் வழக்குக்குப் பொருள் கேட்டேன். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன் எனவரும் பெயர்களில் துஞ்சிய என்பதற்கு இறந்தவென்று பொருள் கொள்ளலாமென்று தோற்றினாலும், ‘ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் பாடலுக்குக் கீழே அவன் இறந்த செய்தியைக் குறிப்பார்களா?’ என்ற சந்தேகம் எழுந்தது. ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

புறநானூற்றில் 34-ஆம் பாட்டு, கிள்ளி வளவனென்ற சோழ அரசனை ஆலத்தூர் கிழாரென்ற புலவர் பாடியது. அதில் அவர்,

“கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே”

என்று வாழ்த்துகிறார். பாட்டின் இறுதியில் ‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது’ என்ற குறிப்பு உள்ளது. பாட்டு அரசனை வாழ்த்துகிறது; குறிப்பிலோ அவன் துஞ்சிய செய்தி விசேஷணமாக அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் செய்யுட்களைத் தொகுத்தவர்கள் எழுதிய குறிப்புக்கள் அவை. அரசர்களை இன்ன இடத்துத் துஞ்சினாரென்று குறித்தல் ஒரு சம்பிரதாயம். அதனை அக்காலத்தில் அறிந்து கொள்ளாமல் இருந்த எனக்கு, ‘துஞ்சிய’ என்பதற்கு ‘இறந்த’ என்ற பொருள் கொள்ளுவது உசிதமாகப்படவில்லை. இந்தவிஷயத்தை கனகசபைப் பிள்ளை தெரிவித்தார்.

துஞ்சியவென்பதற்கு இறந்தவென்றே பொருள் கொள்ள வேண்டுமென்று அவர் எழுதினார். அதற்கு ஆதாரமாகச் சிலப்பதிகாரம், தேவாரம் என்பவற்றை எடுத்துக் காட்டினார். ‘இப்படியே அரசர்கள் இறந்த காலத்தை அவர்கள் பெயர்க்கு விசேடணமாக்கிக் கூறுதல், கோழிக் கோட்டு ஸாமூதிரி அரசரின் பரம்பரை வழக்கம்; திருவனந்தபுரத்தரசரின் வழக்கமும் இதுவே’ என்று பிறவிடங்களிலுள்ள வழக்கத்தையும் தெரிவித்தார். இறுதியில், ‘இந்த அருமையான புறநானூறு வெளிவந்தால் தமிழ் நாட்டார் பல ஆச்சரியமான செய்திகளை உணர்ந்து கொள்வார்கள்,