பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

755

பொருள் வரையறை செய்து கொள்ளாமலே பல விடங்களில் ஏட்டிலுள்ள பாடங்களை அவர் அமைத்திருந்தார். அந்தப் பிரதியைக் கொண்டு நூற் பொருளை நன்கு அறிதல் சிரமமாகவே இருக்கும். அது பதிப்பிக்கப்பெற்று வந்த காலத்திலேயே அதைப்பற்றி, தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு எழுதியிருந்தார்; “மணிமேகலையில் மூன்று மூன்று பாரம் எனக்குக் காட்டினார்கள். அவர்கள் போடுவது நான் முன் எண்ணியிருந்ததிலும் கேடாகவே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியிலிருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்க மென்றிருப்பதை ஒருவர் முழுவதுங் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும் மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்க மென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்டதன் பின் ஏட்டைக் காணாதவர்களெல்லாம் சேரக்கலிங்கமென்று தானே படிக்கவேண்டும்? ‘எட்டி குமரனிருந்தோன்றன்னை’ என்பது ‘எட்டிருமானிருந்தோன்’ என்றும், ‘ஆறறி யந்தணர்’ என்பது ‘ஆற்றி யந்தணர்’ என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே யறிந்து கொள்ளவும்” (29-3-1891) என்று குறித்திருந்தார். பின்னால் புத்தகம் வெளி வந்த காலத்தில் அதைப் பார்த்தபோது, பின்னும் ஆராய்ச்சிக்கு இடமுண்டென்றே தெரிந்தது.

குறிப்புரை

அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங்களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புக்களுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையொன்றுமில்லை என்று கருதினேன். அன்பர்கள் பலர் மணிமேகலை முழுவதற்கும் உரை எழுதி வெளிப்படுத்த வேண்டுமென்று கூறினர். பழந் தமிழ் நூல்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று போப் துரை எழுதிய கடிதங்களும் எனக்குத் தூண்டுகோலாயின. பதவுரையின்றேனும் குறிப்புரையாக எழுதி முடிக்கலாமென்று தொடங்கிப் பெரும்பாலும் எழுதி நிறைவேற்றினேன். சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதையென்னும் பகுதியில் பிற சமய இலக்கணங்கள் வருகின்றன. தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்னும் பகுதியில் பௌத்த மதத்தினர் கூறும் அளவையிலக்கணம் முதலியன உள்ளன. இவ்விரண்டற்கும் குறிப்புரை எழுதுவது எளிதென்று தோற்றவில்லை. வடமொழித் தர்க்க சாஸ்திரங்களிற் பாரங்கதராக விளங்கிய குறிச்சி மகாமகோபாத்தியாய ரங்காசாரியரிடம் போய்க் கேட்டேன். முன்னதிலுள்ள விஷயங்களை அவர் விளக்கினார்.