பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற பட்டம்

757

எழுதி நூலுக்கு அங்கமாகச் சேர்த்தால் படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கு மென்பது என் கருத்து. மளூர் ரங்காசாரியரோடு மணிமேகலையைப் பற்றிப் பேசி விஷயங்களைத் தெரிந்து கொண்ட காலங்களிலெல்லாம் அவர் கூறுவனவற்றைத் தனியே குறித்து வைத்துக் கொண்டேன். பௌத்த மத சம்பந்தமான ஆங்கிலத்திலுள்ள நூற் பகுதிகள் சிலவற்றைச் சில அன்பர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துக் கொண்டேன்.

மும்மணிகள்

புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்னும் மூன்றையும் பௌத்தர்கள் மும்மணிகள் என்று வழங்குதல் மரபு. என்னிடமிருந்த குறிப்புக்களின் உதவியால் அம் மும்மணிகளைப் பற்றிய வரலாறுகளை எழுதத் தொடங்கினேன். ரங்காசாரியர் கும்பகோணத்தில் இருந்த காலத்தில் நான் எழுதியவற்றை அவ்வப்போது அவரிடம் படித்துக் காட்டிச் செப்பம் செய்து கொண்டேன். மாற்றலாகி அவர் சென்னைக்குச் சென்ற பிறகு நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் அதுகாறும் எழுதியவற்றைப் படித்துக்காட்டுவேன். இடையிடையே தமிழ்ச் செய்யுட்களை நான் அமைத்திருத்தலைக் கண்டு அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து பாராட்டுவார்.

பாண்டித் துரைத் தேவர் வருகை

1896-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பாலவநத்தம் ஜமீன்தாராகிய பொ. பாண்டித்துரைத் தேவர் கும்பகோணத்திலிருந்த மௌன ஸ்வாமிகளைத் தரிசித்தற்கு வந்தார். அக்காலத்தில் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்துப் பல கனவான்கள் கூடிய மகா சபையில் அவரைப் பேசச் செய்தேன். இரண்டு மூன்று நாட்கள் அவர் கும்பகோணத்தில் தங்கியிருந்தார்; என் வீட்டுக்கு ஒரு முறை வந்தார். அப்போது பல அன்பர்களையும் அழைத்து உபசரித்து அவருடன் வந்திருந்த சங்கீத வித்துவான் சீனுவையங்கார், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலியவர்களைக் கொண்டு என் வீட்டில் ஒரு சங்கீத விநிகை நடை பெறச் செய்தேன். என்னிடமிருந்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் பாண்டித்துரைத் தேவர் பார்த்துப் பெருவியப்புற்றார். மணிமேகலை அப்போது அச்சாகி வருவது தெரிந்து அதற்குப் பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என்னிடம் இருந்த புறத்திரட்டை அச்சமயம் அவரிடம் காட்டி அது பல பழைய நூல்களிலிருந்து திரட்டிய பல செய்யுட்களைக் கொண்டதென்பதைத் தெரிவித்தேன். “நான் பல