பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

என் தமிழ்ப்பணி


காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையின் மாலைக் காட்சி மனம் நிறையும் மகிழ்ச்சிதரும் மாண்புடையதாகும். கடல் கடந்த நாடுகளினின்றும் வந்து வாழும் வணிக மக்கள் கடற்கரை மணல்மீது, வகை வகையான பொருள்களை வரிசை வரிசையாக பரப்பி வைத்து, விலையை வாயாற்கூறாது, எல்லோரும் காண எழுதி வைத்து வாணிகம் புரிந்திருப்பர்.

அக்கடற்கரையில், மாலைக் காலத்தில் ஏற்றும் விளக்குகளை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது; சுண்ணம் முதலாம் வாசனைப் பொருள்களை விற்பவர் ஏற்றிய விளக்குகளும், பொற் கொல்லர் முதலாம் பல்வேறு தொழிலாளர்கள், தங்கள் தங்கள் தொழில் நிலையங்களில் ஏற்றிய விளக்குகளும், அப்ப வணிகரும், பிட்டு வணிகரும் குடத் தண்டுகள் மீது ஏற்றி வைத்த விளக்குகளும், பல்வகைப் பண்டங்களையும் விலை கூறி விற்கும் மகளிர், தம் கடைகளில் ஏற்றிய விளக்குகளும், கரையில் இருந்தவாறே,கடலில் செல்லும் கலன்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கும், கடல் மேல் சென்று மீன் பிடித்து வாழும் பரதவர், தாம் ஏறிச் செல்லும் திமில்களில் ஏற்றிய விளக்குகளும், வெளிநாட்டு மக்கள், தம் மாடங்களில் ஏற்றிய மணிவிளக்குகளும், பண்டப் பொதிகளை காத்துக் கிடக்கும் காவலர், அப்பண்டப் பொதிகளை சுற்றி ஏற்றி வைத்த விளக்குகளும் ஒன்று கூடி, கடற்கரை வெண்மணலில் வீழ்ந்த வெண்சிறு கடுகையும் எளிதில் எடுக்கவல்ல பேரொளி வீசிக் காவிரிப் பூம்பட்டினத்துக் கடற்கரையைக் கண்ணொளிகெடுக்கும் ஒளியுடையதாக்கிக் கவின் அளிக்கும்.27

ஆன்றோர் உண்மையால் அழியாது எனப் பாராட்டப் பெற்ற புகார் அழிந்து விட்டது. “என்னை குறித்து எடுக்கும் விழாவைப், புகார்நகர் மக்கள் என்று மறுக்கின்றனரோ, அன்றே அந்நகர் அழியும்” என்று இந்திரன் ஒரு