பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

என் பார்வையில் கலைஞர்



வெளியேறிய போது, கலைஞர் இயலாமையில் கையாட்டியது என் இதயத்தையே ஆட்டுவது போல் இருந்தது.

முரசொலி மாறன் அவர்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அப்பாவிக் கலைஞரை, அவர்தான் ஆட்டி வைப்பதாக கட்சிக்காரர்கள் சிலர்கூட கூறுவது உண்டு. இதனால் கலைஞருக்கு பாதகமான நிலையே உருவாகியிருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், கலைஞருக்கு ஒரு மாறன் தேவைப்படுகிறது. நந்தனின் பொறுப்பாசிரியரான என் இனிய தோழர் கவிஞர் இளவேனில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது கலைஞர் ஒரு வகையில ஏமாளிங்க .... அவர் கதை ஒன்றை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டால் போதும் அப்படியே மயங்கிடுவார். மாறன் உடனிருந்து, நல்லவர்கள் கெட்டவர்களை சலித்து அவருக்கு சரியான வழிகாட்டியாக இருக்கிறார்’ என்றார்.

தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் தாய் மாமாவை ‘அம்மான் என்றே சொல்லுவார்கள். இதனால் சகோதரி பிள்ளைகளின் ஜாதகங்கள் கூட தாய்மாமனுக்காவே முதலில் பேசும் என்பார்கள். ஆனால் எனக்கும் என் தாய்மாமா அம்மான் தான். அவரை விட நான் வேறு யாரையும் அதிகமாக நேசிக்கவில்லை. இந்த உறவு கலைஞருக்கும் மாறனுக்கும் அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. மாறன் என்ற ஊன்றுகோல் இல்லை என்றால், கலைஞர் அரசியலில் ஓரளவு முடமாவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த தத்துவார்த்தச் சிந்தனையுடன் இன்றைய தமிழக நல்வாழ்வில் முரசொலி மாறன் அவர்களின் உயிரும், வாழ்தலும் இதனால் கலைஞரின் வாழ்தலும் தமிழக வாழ்தலில் முக்கிய அம்சங்களாக எனக்குப் படுகின்றன