பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

என் பார்வையில் கலைஞர்



விடைபெறப்போன என்னிடம் எந்த இடத்தில் விழா நடைபெறும் என்று கலைஞர் கேட்டார். உடனே ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அல்லது கலைவாணர் அரங்கம் என்று பதிலளித்தேன். போய்வாருங்கள் என்பது மாதிரி கலைஞர் தலையசைத்தார்.

பொதுவாக, கலைஞரை விழாவுக்கு அழைத்தால் அந்த விழாவிற்கான பேச்சாளர்- பங்கேற்பாளர் பட்டியலை கலைஞரிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இது சர்வாதிகாரம் அல்ல. நியாமானதுதான். ஒரு தலைவரை அதுவும் மக்கள் அளவிலும், கட்சி அளவிலும், அரசு அளவிலும் ஈடு இணையற்ற தலைவராக இருக்கும் ஒருவரை விழாவிற்கு அழைக்கும்போது யாராவது ஒருவர், தறுதலைத்தனமாகப் பேசலாம். அல்லது சிக்கலான விவகாரங்களை எழுப்பி, அங்கேயே அவர் பதிலளிக்க வேண்டும் என்பது மாதிரி கூட வற்புறுத்தலாம். விழா மேடையை கொச்சைப்படுத்தி விடலாம்.

எனவே, கலைஞர் போன்ற தலைவர்கள், விழா விவரங்களையும், பேச்சாளர் பட்டியலையும் கேட்பதில் தவறில்லை. நான் கூட என்னை விழாவிற்கு அழைப்பவர்களிடம் மேடையை பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களைப் பற்றி கேட்பதுண்டு. எனக்கு சரிப்படாதவர்கள் என்றால் நான் மறுத்துவிடுவதும் உண்டு. இந்தப் பின்னணியில், கலைஞர், பேச்சாளர் விவரத்தை என்னிடம் கேட்காதது அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கையே காட்டுகிறது. அவரும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அப்படி சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அவ்வளவுதான். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது கலைஞர் என்மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையில் பெருமிதம் ஏற்படுகிறது. கூடவே யாராக இருந்தாலும் சமாளிக்கலாம் என்கிற அவரது போர்க்குணமும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற யூகமும் ஏற்படுகிறது.

கலைஞரிடம் தேதி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நம்ம சமுத்திரம் என்று சொன்ன ஒன்றிப்பில் படியிறங்கினேன். கீழே நின்று கொண்டிருந்த ஆர்க்காட்டார் உள்ளிட்ட அமைச்சர்களையும், தலைவர்களையும் கித்தாப்பாகப் பார்த்துக் கொண்டே கலைஞரின் வீட்டைவிட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினேன்.