பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

என் பார்வையில் கலைஞர்



அந்தக் காலகட்டத்தில், என் வரைக்கும் திராவிட இயக்கம் என்பது திராவிட முன்னேற்ற கழகம் தான். அவ்வப்போது தந்தை பெரியார் பேசுவது தினத்தந்தியில் மட்டுமே வரும். அதோடு சரி. இந்தக் கட்டத்தில் பள்ளிக்கூட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் நான் சிறிது சமூக சிந்தனையையும் வளர்த்துக் கொண்டேன். பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன். மாவட்ட அளவிலான உயர்நிலைப்பள்ளி பேச்சுப்போட்டியில் நான் வெற்றிப் பெறுவதற்காகவும், அந்த வெற்றிக்கு வித்தியாசமான பேச்சு இருக்கவேண்டும் என்பதற்காகவும் பாரதியை மெய்யாக விரும்பியதாலும் அவரோடு பழகியவர்கள், அவர்களது வாரிசு உறவினர்கள் ஆகியோரை சந்தித்து மாணவத்தனமாக சில கேள்விகளைக் கேட்டதுண்டு.

உண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலை பிடித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். செல்லம்மா கொஞ்சம் நஞ்சம் கிடைத்த அரிசியை புடைக்கும் போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்க பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ இந்த இயக்கத்தின் முன்னோடியாக சித்தரிக்கப்பட்ட அவர் மீது எனக்கு தீராப்பகை ஏற்பட்டது.

இன்னொரு முக்கிய காரணம், திராவிட இயக்கத்தைப் பற்றிய சரியான தகவல்களோ அல்லது அன்றைய பிராமணர்கள் கிழித்த சூத்திரக் கோட்டையோ அந்தக் கோட்டிற்கும் கீழே உள்ள ஆதிதிராவிட மக்களைப் பற்றி வரலாற்று ரீதியான தகவல்களையோ இந்த இயக்கம் சொல்லாலோ அல்லது எழுத்தாலோ தெரிவித்ததில்லை. எனக்கு தெரிந்து ‘உஞ்சிவிருத்தி பாப்பான்’ என்பன போன்ற வசவு வார்த்தைகளே அதிகமாக புழங்கப்பட்டன. இதனால், இந்த இயக்கத்தின் மீது எனக்கு ஒட்டுமொத்தமான கடுமையான வெறுப்பு என் இளம் வயதிலேயே பதிந்துவிட்டது. பிராமணர் பக்கமே அனுதாபம் ஏற்பட்டது.