பக்கம்:எழில் விருத்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம் - 7 ஆன்மீக உணர்வு இழையோடிச் செல்வதைக் காணலாம். கவிஞரின் புதிய புதிய அனுபவங்கள், புதிய புதிய மொழி மின்னல்கள் அவருடைய கவிதைகளில் தவழ்ந்து வருவது இயல்பு. அறிவுக் கொவ்வாத-ஆராய்ச்சிக்குப் பொருந்தாத போலிக் கற்பனைகளோ, உணர்ச்சியற்ற வருணனைகளோ வாணிதாசரின் கவிகளில் காண்பதரிது. இன்றுவரை அவர் பதின் மூன்று கவிதைப் படைப்புகளைத் தமிழ் அன்னைக்கு அழகுறு அணிகளாக அணிந்து மகிழ்ந்துள்ளார். இப்பொழுது வெளிவரும் 'எழில் விருத்தம்' அவருடைய பதினான்காவது படைப்பாகும். கவிஞன் எங்கெங்கும் எழிலைத்தான் காணுகிறான்; கண்டு மகிழ்கிறான்; 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த மனப்பான்மையுடன் அதைப் பாட்டிலே பாங்காக வடித்துக் தருகிறான். 'கைபுனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு' என்று பாராட்டப் பெறும் இயற்கை யெழிலையும், விந்தை மனிதன் படைத்த செயற்கையெழிலையும் நம் கவிஞர் சொல்லோவியமாகத் தீட்டும் திறம் வியப்பூட்டுவதாகும். கருத்துச் செறிவோடு கூடிய இனிய, எளிய சொற்களின் மூலம், 'இழும்' எனும் ஓசை நயம் பெற்று இந்நூல் வீறுடன் விளங்குகிறது.