பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39


மணி: ‘பொருளும் செல்வமல்லவோ?’

முத்து : ‘இல்லையென்றது யார்? ஒழுக்கம் உடையவனிடத்தில் இருக்கும் பொருளுக்குத்தான் செல்வம் என்று பெயர். ஒழுக்கமற்றவனிடத்தில் இருக்கும் பொருளுக்குச் ‘செல்வம்’ என்று பெயரல்ல அது அவனுடைய தீய செயல்களுக்குப் பயன்படுவதால் கொண்டவனைக் கொல்லும் கொடுவாள்’ என்றே பெயர் பெறும்.

வழிப்பேச்சு ஒருவாறு முடிந்தது. மணியும் முத்துவும் வீட்டை அடைந்தனர். மணியின் தந்தை இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்று, ‘எங்கே, தேடிய செல்வத்தைக் காட்டுங்கள்?’ என்றார். இருவரும் நடந்தவைகளைக் கூறினர். முத்து மணியைச் ‘செல்வம்’ என்றான் மணி முத்துவைச் ‘செல்வம்’ என்றாள். ‘நீங்கள் இருவருமே செல்வங்கள்’ என மணியின் தந்தை மனமகிழ்ந்து இருவரையும் இரு கைகளாலும் தழுவிக் கண்ணிருகுத்தார். “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” என்ற குறட்பா அவர்க்கு நினைவுக்கு வந்தது; மகிழ்ந்தனர். முத்துவின் தாய் தந்தையரையும். தன்னோடு வந்திருக்கச் செய்து, முத்துவைத் தன் மருமகனாகவும் பெற்று, உண்மைச் செல்வங்களைப் பெற்ற அச்செல்வர் உயர்ந்த செல்வராகக் காட்சியளிக்கின்றார்.

இவ்வரலாறு நமக்கு அறிவிப்பதெல்லாம், ‘ஒழுக்கமே உயரிய செல்வம்’ என்பதுதான், ‘திரு’வும், ஒழுக்கமுள்ள விடத்தில்தான் இருக்கும். ஒழுக்கம் வேறு, திரு வேறு அல்ல ஒழுக்கமற்றவர்களின் தொடர்பை, ‘திரு நீக்கப் பட்டார் தொடர்பு’ எனக் கூறுவர் அறிஞர்.

முடிவாக நாம் அறிந்துகொண்டது என்னவெனில், ‘ஒழுக்கமே முதற் செல்வம்; மற்றவை துணைச் செல்வங்கள் ; இவை அனைத்தும் சேர்ந்ததே திருச்செல்வம்” என்பதுதான். இதன்படி மணியும், முத்துவும் திருச்செல்வம் பெற்ற திருச் செல்வர்களானார்கள்.