100
ஒத்தை வீடு
போக முடியுமா? அப்படிப் போய் உயிரோடதான் இருக்க முடியுமா ஒரே ஒரு சந்தர்ப்பம் அவளுக்குக் கொடுங்க மாப்பிள்ளே... அப்பக்கூட நீங்க அவளை அடிப்பீங்களோ... பிடிப்பீங்களோ... அவள் ஒங்க பொருளு அவளை என்ன வேணுமின்னாலும் செய்யுங்க... நாங்க ஏன்னு கேட்கமாட்டோம்...”
சம்மந்தியம்மா பேசி முடிப்பது வரைக்கும் பொறுமை காட்ட முடியாமல் சொர்ணம்மா, கைகளை ஆட்டியபோது, காந்தாமணி, அவற்றைப் பிடித்துக் கொண்டாள். இப்போது அந்தம்மா கைகளை நீட்டாமலேயே கத்தினாள்...
“இந்த மாதிரி பசப்பற வேலையெல்லாம் வேண்டாம்... என் மகனை அவ ராவோட ராவா குத்திக் கொலை பண்ணணும் அப்பப்பா... என்ன நல்லெண்ணம் உனக்கு...”
சொர்ணம்மா, மகளிடமிருந்து கையை எடுத்து விட்டு, அங்குமிங்குமாய் ஆடிக் காட்டியபோது, மனோகர், அம்மாவை முறைத்தபடியே கத்தப் போனான். அதற்குள் வாசல் கதவு திறக்கப்பட்டது. சங்கரியை எட்டிப் பார்க்கப்போன மனோகரின் கண்களை இரண்டு உருவங்கள் மறைத்தன. ஸ்டெதஸ்கோப் மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கூட நின்ற பெண்ணுக்கு இருபத்தேழு வயதிருக்கலாம்... டாக்டர் கத்தினார்...
“இப்படி சந்தைக்கூட்டம் போட்டால் எப்படி...? ஏம்மா நீ இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனே... எதுக்காக வந்தே...”
“காசு செலவளிக்கிறவள் நான். வரப்படாதா...”
மனோகர் ‘எம்மா’ என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு, டாக்டரைக் கேட்டான்...
“இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்...”
“கன்கிராசுலேஷன் மிஸ்டர் மனோகர்...”
மனோகர் அந்த இளம் பெண்ணை புரியாமல் பார்த்தான். அவள் தனது பாராட்டுக்கு விளக்கமளித்தாள்.
‘அந்தம்மா, ஒங்க பெண்டாட்டி, என்கிற நினைப்பு வந்திருக்கே... இப்போவாவது பார்க்கணுங்கிற எண்ணம் வந்திருக்கே... அதுக்குத்தான் பாராட்டினேன்...’
அந்தப் பெண்ணின் கோபத்தைச் சந்திக்க முடியாமல், மனோகர், டாக்டரிடம் அடைக்கலமானான்.
“அவளுக்கு எப்படி இருக்கு டாக்டர்...”