உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

புதைமண்

சித்திக்காரியும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் இன்று அவர் டூரிலிருந்து திரும்பி வருகிற நாள். இதுகளையும் படுக்கை அறையில் போட்டால் திட்டோ திட்டென்று திட்டுவார். செல்வாவிற்கும் இது தெரியும் அது என்னமோ தெரியவில்லை பகலில் அடிக்காத குறையாக சண்டைபோடும் சித்தப்பாவும் சித்தியும், இரவில் சிரிப்பும் கும்மாளமுமாய் கிடப்பார்கள்.

அந்த அறையை பெருக்க வந்த வேலைக்காரம்மா, செல்வாவை, பரிதாபமாகப் பார்த்தாள். இவன் ஒரு சமயம், சித்தியினுடைய ஏச்சு தாங்கமுடியாமல், கட்டிய லுங்கியோடும், போட்ட சட்டையோடும் வெளியேறப் போனபோது, இந்த வேலைக்கார அம்மாதான், அவன் மோவாயைத் தாங்கி, ‘ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சு பொறுத்துக்கோ ராசா பாலப் பார்க்கிறதா... பால் காய்ச்சின பானையைப் பார்க்கிறதா ஒன் சித்தப்பா ஒன்மேல உயிரையே வெச்சிருக்காருப்பா... ஏடா கோடமா எங்கேயும் போயிடாதேப்பா’ என்று மட்டும் ஆலோசனை சொல்லவில்லையானால், செல்வா, இந்நேரம் ஏதோ ஒரு நகரில், பொறுக்கிக் கொண்டு இருந்திருப்பான்.

சித்திக்காரி, குளித்து முடித்துவிட்டு அடுப்பறைக்கு போனாள். அரைமணி நேரத்தில் “சாப்பிட்டுத் தொலையுங்க... நான் கொஞ்ச நேரம் படுக்கணும்... உடம்பு சரியில்ல.” என்றாள்.

செல்வா, குழந்தைகளை யூனிபாரமாக கூட்டி வந்தான். சித்திக்காரி தட்டில் இட்லிகளை போட்டபடியே, ‘உடம்புக்கு சுபமில்லன்னு சொல்றேனே என்ன சித்தி உடம்புக்குன்னு கேட்டியா?’ என்று அவனை வம்புக்கு இழுத்தாள் உடனே செல்வா, “எதுக்கும் டாக்டரை போய்ப் பாருங்க சித்தி... நான் வேணுமுன்னா லீவு போட்டுட்டு உங்களை கூட்டிகிட்டுப் போகட்டுமா?” என்று நேயத்தோடு கேட்டான் சித்திக்காரி கனிந்து போனாள் “நாலு இட்லி மட்டும் சாப்பிடுறியே... வயிறு கேட்குமா... இன்னையிலிருந்து ஆறு இட்லி சாப்பிட்டாகணும் இந்தா ஒனக்கு பிடிச்சமான மிளகாய்ப் பொடி... ஏய் மூதேவிகளா! இன்னுமா உங்க அண்ணன் உங்களுக்கு ஊட்டணும். சீக்கிரமாகட்டும் அவனும் காலேஜுக்கு போகணுமில்ல...” என்றாள்.

செல்வாவும், வேலைக்காரம்மாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள் இந்த சித்தியை பாம்பென்று அடிக்கவும் முடியாது, பழுதென்று தள்ளவும் முடியாது சாப்பாட்டு விஷயத்தில் செல்வாவிற்கு என்றுமே அவள் குறை வைத்ததில்லை ஒருசில சமயங்களில் இவன் துணியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/146&oldid=1838312" இலிருந்து மீள்விக்கப்பட்டது