38
ஒத்தை வீடு
“நான் ஒன்ன மாதிரி உயர்ந்த மனுஷி இல்லயே... எனக்கு எட்டல.”
“லோசாக் குதிச்சா எட்டுது.”
“நான் குதிக்கப்படாது.”
“ஏன்...?”
“அபார்ஷன் ஆயிடுமாம்... மூணு மாசம் வரைக்கும் எச்சரிக்கையாய் இருக்கணுமாம்... வயிறு குலுங்கப்படாதாம்...”
“ஒன் புள்ளைக்கி ரெண்டு வயக கூட ஆகல. இதுக்குள்ளே என்ன அவசரம்...?”
“உனக்கு தெரியுது... அவருக்குத் தெரியமாட்டேங்குதே... எங்க வீட்டு மிஸ்டர், குணத்துல மட்டுமில்ல... அதுலயும் உடும்புப் பிடிதான்... அவர் டூர் போய்ட்டுத் திரும்பி வரும்போது, நான் பயந்து போயிடுவேன்... பயமுன்னு கூடச் சொல்லப்படாது... பயபக்தி... ஒரு மணி நேரம் புரட்டி எடுத்திடுவார்... போயும் போயும் கொல்லர் தெருவுல ஊசி விக்கிறேன் பாரு... உங்க வீட்டு மிஸ்ட்டரும் நேற்று ராத்திரி ஒன்ன புரட்டி எடுத்துருப்பாறே! ஆசாமியைப் பார்த்தாலே அசத்தறது மாதிரித்தானே இருக்காரு...!”
சங்கரி, கண்களை மூடினாள் காணாத ஒன்றை காணவேண்டும் என்ற தாபம். ஒரு மணி நேரம் புரட்டுவாராமே... முப்பது வினாடிகளே, அவ்வளவு இன்பமாக இருந்தால், அந்த ஒரு மணி நேரம்... அறுபது நிமிடம்... மூவாயிரத்து அறுநூறு வினாடிகள் எப்படி இருக்கும்? இங்கே ஒரு நிமிடம் கூட இல்லை... அதிலும் பாதி. அதுவும் காதல் விளையாட்டாய்க் கரைந்து, இலக்கு இல்லாமலேயே அற்றுப் போகும்... ஒரு மணி நேரம் அடேயப்பா...
கண்மூடிக் கிடந்த சங்கரியை, உமா உலுக்கினாள்... நேற்றைய ராத்திரி உருட்டலை, அவள் நினைத்து மனதுக்குள் இன்றைய ராத்திரிக்கு ஒத்திகை நடத்துவதாக நினைத்தாள்... அந்தச் சமயத்தில் அவளுக்கு மாங்காய்தான், கண்ணில்பட்டதே தவிர, காந்தாமணி சொன்னது நினைவிற்கு வராமலே பேசினாள்.
“ஒருவேளை நீ கூட உண்டாயிருக்கலாம்... அப்படின்னா நீயும் குதிக்கப்படாது... மாங்காய் கிடைக்காட்டால் போவட்டும்... மாவடு இருக்கவே இருக்கு... ஆனாலும் வாலிப மாங்காய் ருசியே தனி... மாவடுவிலே புளிப்புக்குப் பதிலா துவர்ப்புதான் இருக்கும்.”
“பரவாயில்ல... ஒனக்காவது ருசிக்கட்டும் நானே பறித்துத் தாரேன்.”