சு. சமுத்திரம்
43
“எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம்...”
“என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே. அதுக்குள்ளே என்ன அவசரம்....”
இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான்... இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, “ஏங்க உள்ள வாங்க... மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா...” என்று கத்தினாள்.
இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாதுபோல், மனோகர், வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள். மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம்.
4
மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும் அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான்.
அங்குமிங்குமாய் நடந்து, முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள்களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு