பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்

பின்னையது, வேர்ச்சொற்(root)களின் உறவும், இலக்கண வொற்றுமையும் பற்றிப் பகுப்பது. இவ்விரண்டும் முன்னர்க் கூறப்பட்டன.

மாக்ஸ் முல்லர், அசைநிலையை வேர்நிலை (Radical Stage) என்றும், பகுசொன்னிலையை ஈற்றுநிலை (Terminational Stage), இருதலைச் சிதைநிலை (Inflectional Stage) என்றும் இரண்டாகப் பகுத்தும் கூறுவர்.

பகுசொன்னிலையும் ஈற்றுநிலையும் ஒன்றே. இரு தலைச் சிதை நிலையாவது, வருமொழிபோன்றே நிலை மொழியும் சிதைதல்.

கா : (பெருமகன்) — பெம்மான்.

மொழிநூல்

மொழிநூலாவது சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலியனபற்றிப் பல மொழிகட்கிடையிலுள்ள தொடர்பை ஆராயுங் கலை.

மொழி நூல் முதலாவது கிரேக்கு, இலத்தீன் என்னும் மொழிகளைக் கற்குங் கல்வியாக, 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் தோன்றிற்று. பின்பு, ஆங்கிலேயரும் விடை யூழியரும் (Missionaries) இந்தியாவிற்கு வந்து, சமஸ்கிருதத் திற்கும் கிரேக்க லத்தீன் மொழிகட்குமுள்ள நெருக்கத்தைக் கண்டு பிடித்தபின், ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப் பற்றிச் சிறப்பாராய்ச்சி எழுந்தது. ஆரிய மொழிகளை யாராய்ந்தவர்களுள் கிரிம் (Grimm), வெர்ணெர் (Verner) என்ற இருவர் தலை சிறந்தவர். உலகத்தின் பல இடங்களுக்குச் சென்ற விடையூழியரும் வழிப்போக்கரும் அவ்வவ்விடத்து மொழிகளைக் கற்று, மேலை மொழிகளில் அவற்றின் இலக்கணங்களை வரைந்து வெளியிட்டதுமன்றி, இனமொழிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பல குடும்பங்களாகவும் வகுத்துக் காட்டினர். ஒப்பியன் மொழி நூற்கலையே விடையூழியராலும் வழிப்போக்கராலும்தான் உருவாயிற்று என்று கூறினும் மிகையாகாது. பிறகலையாராய்ச்சியாளரும் மொழிநூலுக்கு உதவியிருக்கின்றனர்.

பல நாட்டு மொழிகள் மேனாட்டு மொழிகளில் வரையப்பட்ட பின், மாக்கசு முல்லர் என்ற மாபெரும்புலவர், சென்ற நூற்றாண்டில், தம் வாழ்நாளையெல்லாம் மொழி நூற் கல்விக்கே ஒப்புக்கொடுத்து, உலக மொழிகளிற் பெரும்பாலன