பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪

ஒப்பியன் மொழிநூல்

கா : தமிழ் - மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு.

ஆங்கிலம் - thin + er = thinner, sit + ing = sitting.

5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமை யிருக்கும்.

6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன் வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராய வேண்டும்.

சிலர், தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளனவும், ஆரியக் கலப்பு மிக்குள்ளனவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழி களுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதியுள்ள 'கேரளபாணினீயம்', 'கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம்'போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக்கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழிநூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய மனவிரிவையடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரிஸ் (Morris), ஆங்கஸ் (Angus), ஸ்கீற்று (Skeat), ஸ்வீற்று (Sweet), உஹ்விட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங்களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிவும் பெரும் புலவருமான வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத்திலக்கணங்களையும் பின்பற்றியதால் தாம் எழுதியுள்ள 'இலக்கணக் கட்டுரைகள்', 'திராவிட மொழியின் மூவிடப் பெயர்' என்னும் இலக்கணங்களுள், சில சோர்வு பட்டுள்ளார். அவையாவன:

(1) தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றே யென்பது.

தொல்காப்பியத்தில், மொழிமரபில்,

“உச்சகாரம் இருமொழிக் குரித்தே”

“உப்பகாரம் ஒன்றென மொழிப”

என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றியலுகர வீற்றையன்று.

குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை