பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬

ஒப்பியன் மொழிநூல்

என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறியதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல்காப்பியர் என்றார் ரெட்டியார்.

குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக்காலத்திலிருந்ததென்பது பெறப்படுமேயன்றி, ஆசிரியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது பெறப் படாது.

பண்டைத் தமிழர் நுண்ணிய செவிப்புலன் வாய்ந்திருந் தமையின், குற்றுகரம் முற்றுகரத்தினும் குறுகினதென்பதைக் காட்டும்பொருட்டுப் புள்ளியிட்டெழுதினர்.

குற்றுகரத்தின்மேல் அரைமதி (அல்லது குறும்பிறை) வைத்தெழுதுவது இன்றும் தென்மலையாள நாட்டில் உள் ளது என்று ரெட்டியாரே கூறுகின்றார். மலையாள நாட்டில், இற்றைத் தமிழ்நாட்டிலில்லாத பல பண்டைத் தமிழ் வழக்கங்கள் உள்ளன என்பது பின்னர்க் காட்டப்படும்.

தொல்காப்பியர் காலத்தில், குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டெழுதினாராயின், அவ்வழக்கம் ஏன் பிற் காலத்திலில்லை என்று கேட்கலாம். அதற்கு விடை கூறுகின்றேன்.

தொல்காப்பியர் காலத்தில், எகர ஒகர உயிர்களையும் அவையேறின மெய்களையும், மேற்புள்ளியிட்டுக் காட்டுவது வழக்கமாயிருந்ததென்பது,

நூன்மரபிலுள்ள,“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15)

“எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (16)

என்னும் நூற்பாக்களான் அறியலாம். ஏகார ஓகாரங்களும், அவையேறின மெய்களும், புள்ளி பெறாமையாலேயே, தத்தம் குறில்களினின்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இவ் வழக்கம் அற்றுப்போய் விட்ட தென்பது, தமிழில் எகர ஒகர உயிரேறின மெய்களும், ஏகார ஓகார உயிரேறின மெய்களும், வேறுபாடின்றி யெழுதப்பட்டமையால், பின்னவற்றை வேறுபடுத்திக் காட்டற்கு வீரமாமுனிவர் கொம்புகளை மேற்சுழித்தெழுதினதாகக் 'கொடுந்தமிழ்' இலக்கணத்திற் கூறியிருப்பதால் அறியப்படும். இங்ஙனமே குற்றுகரப்புள்ளியும் வழக்கு வீழ்ந்ததெனக் கொள்க.