பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦

ஒப்பியன் மொழிநூல்

தாலேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடுவது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழியில் இந்நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது.

அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததேயன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலியிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதினர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதினால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவதாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல்களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை 'ஒன்றென மொழிப' என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம்.

காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்தமுற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித்தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள்களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும்.

கா : காட்டுவிலங்கு, ஆற்றுநீர்.

நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றி யனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டாகும் இறுக்கத்திற் கொப்பிடலாம்.

புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட்டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினாலேயே. புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றாகவும் எச்சமாகவும் வழங்கப்பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனிவடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது.

போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத்தத்தால் ஈறு இரட்டித்தவையே.

சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும், சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார்.