பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௨௧

பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இருவகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க.

(5) 'அரவு' என்றொரு தொழிற்பெயரீறு இல்லை யென்பது, அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே,

கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு

என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார்.

'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும்' என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக்கின்றன.

அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம் என்னும் தொழிற்பெயராலறியப்படும்.

அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும்.

அரம் — (அரமு) — அரவு.

ஒ.நோ. உரம் — உரவு, தடம் — தடவு, புறம் — புறவு.

(6) மூவிடப்பெயர் வினாப்பெயர்களின் அமைப்பு, உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது.

அ, இ, உ, எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச்சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப்பெயர் முன்னிலைப் பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்துகளின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். இதன் தவறு பின்னர் விளக்கப்படும். ஆயினும் இங்கொரு செய்தியைமட்டும் கூற விரும்புகின்றேன். அதாவது, மேற்கூறிய நாற்பாற்பெயர்களும் அரிவரித் தோற்றத்திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்றுதற்கு) முந்தினவென்பதே.