பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௨௯

தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம்மூவகைச் சொற்களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன.

மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய்ஸ் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது.

19. மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று.

மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும்.

மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண்டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்கவேண்டுமாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சியிலிருந்து தான் பின்னர் மொழி உருவாகியிருக்கும்.

20. மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும்.

கலைகள் இயற்கலை (Physical Science), ஆக்கக்கலை (Historical Science) என இருவகைப்படும். பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக் கலையும் ஓர் ஆக்கக்கலையே.

21. மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ஆக்கப்பெற்றவை.

22. ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம்.

ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன:

(1) மன்பதைப்பெருக்கம்

ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும்.