பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௮

ஒப்பியன் மொழிநூல்

ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிஸ்தவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர்.

தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை.

17. மொழி மக்கள் கூட்டுறவா லாயது.

மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானாயின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது.

ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப் பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும்.

இக்காலத்தில் உவில்க்கின்ஸ் போன்ற ஒருவர், இடுகுறி களைக்கொண்டு ஒரு புதுமொழியமைக்க முடியுமாயினும், இயற்கையாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன் மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது.

18. மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று.

மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும்.

தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற்களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியிலுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும்.

மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர்.

கா :கூ(என்று கத்தினான்)—இடைச்சொல்

கூவி — வினைச்சொல்
கூவல்—பெயர்ச்சொல்