பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௧௨

ஒப்பியன் மொழிநூல்

ஸ்தா= நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.)

மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன.

பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும் போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள்,

கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல் களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கிறார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழாசிரியர் இராஜகோபாலையரவர்களும், தமிழ்க் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள்.

ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துகளான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங் காட்டிக் கூறுகின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.[1]இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம்.

ச ரி க ம ப த நி என்பவற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்துக்களையே, கு து க உ இ வி த என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக் கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை.

பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றையே, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஒளடவம்,


  1. 1 கருணாமிர்த சாகரம்.பக்.112-5.