பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨௮

ஒப்பியன் மொழிநூல்

நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென்னும் கீழ்க்கணக்கு நூற் கடவுள் வாழ்ந்துச் செய்யுளிலுள்ள 'நான்மறை' என்னுந் தொடர்க்கும் இங்ஙனமே பொருள் கூறப்பட்டுள்ளது. மற்றப்படி, சமணர்க்கு நான்கு மறைகளின்மை யறிக. பதினான்கு சுரமுள்ள கோவையைப் பதினாற்கோவை யென்பதுங் காண்க.

ஆரியர்க்குத் தொல்காப்பியர் காலத்தில் ஒரே மறைதானிருந்தது. இப்போதும் உண்மையானபடி ஆரிய மறைகள் ருக்கு, அதர்வணம் என இரண்டேயாகும். யசுர், சாமம் என்பன பெரும்பாலும் ருக்வேத மந்திரங்களைக் கொண்டவையே. ருக் வேதத்திலுள்ள மூலமந்திரங்கள் 1028 [1] என்று சொல்லப்படுகிறது. ருக்வேத மந்திரங்களுள் வேள்விக்குரிய வற்றைப் பிரித்து யஜுர் வேதமென்றும், பாடுவதற்கேற்ற வற்றைப் பிரித்து இசைவகுத்துச் சாமவேத மென்றும் பெயரிட்டனர். அதர்வண வேதம் பெரும்பாலும் மாந்திரீக முறையான மந்திரங்களைக் கொண்டது; அது பிற்காலத்தது. திராவிடர் ஆரியர் வருமுன்னமே மாந்திரீகத்தில் தேர்ந்திருந் ததினாலும், ஆரியர் முதலாவது திராவிட மாந்திரீகத்தைப் பழித்தமை ருக்வேத மந்திரங்களாலறியக் கிடப்பதாலும் அதர்வணம் மற்ற மூன்று வேதங்கட்கும் பிற்பட்டதினாலும், ஆரியர் திராவிடரிடமிருந்து மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்ட பின்பே அதர்வண வேதம் தோன்றினதாகத் தெரிகின்றது. இதன் மந்திரங்களிலும் ஏறத்தாழ ஆறிலொரு பாகம் ருக்வேதத்திலுள்ளவை என்று சொல்லப்படுகிறது.

ஆரிய வேதங்களை நான்காக வகுத்தது வியாசர் என்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும் சொல்லப் படுவதினால், தொல்காப்பியர் காலத்தில் ஆரிய வேதம் ஒன்றாகவேயிருந்தது என்பது தேற்றம். ஆகையால், தொல் காப்பியப் பாயிரத்திலுள்ள 'நான்மறை' என்பது நான்கான ஆரிய வேதங்களைக் குறிக்கமுடியாது.

தொல்காப்பியத்திற் சுட்டப்பட்ட தமிழ்மறைகள் இதுபோது இறந்துபட்டன.

இப்போது தமிழ்மறையாகவுள்ளன, பன்னிரு திருமுறைகளுள் முதற் பதினொன்றும், நாலாயிர திவ்வியப் பனுவலும், திருக்குறளுமே.


  1. 1.Vedic India,p.114.