பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்ப்யர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௨௬

“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமுந் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்”

என்று ஒளவை கூறியதுங் காண்க.

சில தமிழ்ப்பகைவர், திருக்குறள் மறையாவதெங்ஙனம் என்கின்றார். திருக்குறள் 'தமிழ்மறை', 'பொதுமறை', 'உத்தர வேதம்', 'தெய்வநூல்', 'பொய்யாமொழி' என்று கடைக்கழகப் புலவராலேயே மறையாகக் கொள்ளப்பட்டிருக்க, இப்போது அதன் மறைத்தன்மையைப்பற்றி ஐயங்கொள்வானேன்?

கடவுள், அவரை ஆன்மாக்கள் அடையும் வழி, அங்ஙனம் அடைவதால் உண்டாகும் பயன், அடையாமையால் நேரும் கேடு என்றிவற்றைக் கூறுவதே மறைநூலிலக்கணமாகும். திருக்குறள் இவ்வனைத்தும் கூறுவதால் மறை நூலாவதற்குத் தடையென்னை யென்க.

சிறுதெய்வ வழுத்துகளும், சிலர் சோமச்சாற்றைக் குடித்து விட்டு வெறியிற் கூறினவைகளும்[1] மறைகளாயிருக்கும் போது, எல்லா மதத்திற்கும் பொதுவான முழுமுதற் கடவுளையடையும் வழியைக் கூறுவதும், கள்ளூணைக் கண்டிப்பதுமான திருக்குறள் மறையாவதற்குத் தடையென்னை யென்க.

கடவுட்பற்றில்லாத சிலர், திருக்குறளில் வீட்டைப் பற்றிச் சொல்லவில்லையே என்கின்றனர். வீட்டைக் கண்டு வந்தவன் இங்கொருவனுமில்லையென்றும், வீட்டையடையும் வழி அறத்துப் பாலில் ஈரியல்களிலும் சொல்லப்பட்டுள்ளதென்றும், அங்ஙனம் காரண வகையானன்றி, வரணனை வகையான் வீட்டைக் கூற முடியாதென்றும் அவர் அறிந்து கொள்க.

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் — மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்”

என்பது ஒரு பழைய வெண்பா. இதனாலும், தமிழர்க்கு மறையிருந்தமையுணரப்படும். தமிழர்க்கு மறையிருப்பவும், ஆரியரை மறையோர், வேதியர் என்றது, புதுமைபற்றி


  1. 1.Vedic India,p.174.