பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௪௩௬

பிராணி என்னுஞ்சொல்லும், முறையே, குன்றக்கூறலாகவும் மிகைபடக் கூறலாகவும் வழங்கி வருகின்றன.

எழுத்துகளில், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் போல்வன. அவற்றின் பெயர்களாலேயே கூறப்பட்டன. இப்பெயர்கள் எழுத்தைக் குறிக்கும்போது உவமையாகு பெயர். எழுத்திற்கு உயிராவது ஒலி.

பொய்யான உடம்பை மெய்யென்றது மெய்ப்பொருள் நூலுக்கு முரணென்று கூறுவர் சிலர். உடம்பு பொய்யானதென்று முன்னைத் தமிழர் அறிந்திருந்தாலும், உடம்போடு கூடிய நிலையே உயிர் வாழ்க்கையாதலின், உடம்பை மெய்யென்று மங்கல வழக்காய்க் கூறினர் என்க. சாவைப் பெரும்பிறிது என்றும் சுடுகாட்டை நன்காடு என்றும் அவர் கூறியதுங் காண்க.

ஓர் ஆளில், அல்லது உயிர்ப்பொருளில், உயிர் உடம்பு என இருபொருள் கலந்திருப்பினும், காண்பார்க்கு உடம்பே முற்பட்டுத் தோன்றும்; அதன் பின்னரே அதற்குள் உயிரிருப்பது அறியப்படும். அதுபோல, உயிர்மெய்யெழுத்திலும் மெய்யெழுத்தே முன் ஒலிக்கும்; அதன் பின்னரே உயிர் ஒலிக்கும். இதை,

“மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே”என்றனர் இலக்கணிகள்.

எல்லா மொழிகளிலும் மெய்யும் உயிருமாய் வரும் எழுத்துக்கள் இணைந்தே ஒலிக்கும். இதை மேனாட்டார் நோக்காததினால், உயிர்மெய்க்குத் தனிவடிவம் வகுக்காமல், மெய்யையும் உயிரையும் அடுத்தடுத்து வெவ்வேறாயெழுதுவாராயினர். இது மாணவர்க்கு எளிதாயினும், ஆங்கில தமிழ இலக்கணிகளின் மெய்ப்பொருளுணர்ச்சித் தாழ்வேற்றங் களைக் குறிக்கத் தவறாதென்க.

சொற்களுக்கு இலக்கணத்தில் பெயர் வினை என்று மக்கள் தொடர்பான பெயர்களே இடப்பட்டிருக்கின்றன. பெயர் = ஆள். பெயர் = பேர். எத்தனை பேர் என்னும் வழக்கை நோக்குக. வினை = செய்கை.

பொருள்களைப் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி, உயர் திணை, அஃறிணை என இரண்டாக வகுத்தனர் தமிழர். இப்