௧௩௨
ஒப்பியன் மொழிநூல்
பாகுபாடு வேறு மொழியில் இல்லை. சொற்களையும் அவை குறிக்கும் பொருள்கள்பற்றி இரு திணையாக வகுத்தனர்.
தமிழில், சொற்கள் அவை குறிக்கும் பொருள்கள் பற்றியே பாலுணர்த்தும், ஆரிய மொழிகளிலோ, அவை ஈறுபற்றியே பொருளுணர்த்தும்.
வடமொழியில் மனைவியைக் குறிக்கும் சொற்களும், தாரம், பாரியை, களத்திரம் என்னும் மூன்றும் முறையே ஆண்பாலும் பெண்பாலும் அலிப்பாலுமாம்.
உயிர்களை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிரீறாக அறுவகையாகப் பகுத்தனர் தமிழர்.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
(மரபு. 27)
என்று முன்னோர் உயிர்களைப் பகுத்தமையைக் கூறி, அதற் கடுத்த நூற்பாக்களில், அவ்வுயிர்கட்குப் “புல்லும் மரனும்”, “நந்தும் முரளும்”, “சிதலும் எறும்பும்” “நண்டும் தும்பியும்” “மாவுமாக்களும்”, “மக்களும் பிறவும்” என முறையே காட்டுத் தந்தனர் தொல்காப்பியர்.
“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என்பதனால்,(மரபு. 86) ஐம்பூத வுணர்ச்சியும் தமிழர்க்கிருந்தமை யறியப்படும்.
“மறுவில் செய்தி... அறிவன் தேயமும்” என்று தொல்காப்பியர் கூறுவதினாலும். தமிழர் மெய்ப்பொருளுணர்ச்சியை ஒருவாறுணரலாம்.
ஒழுக்க நூல்— (Ethics)
தொல்காப்பியத்தில், புறத்திணையியலில் 44ஆம் நூற்பாவில் “மூன்றன் பகுதி” என்று கூறியிருப்பதால், ஒழுக்க நூல் அக்காலத்தில் தமிழிலிருந்தமை உணரப்படும். மூன்றன்