பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௩௩

பகுதியாவது அறத்தினால் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தல் என்றல். அறம்பொருளின்பம் என்பது ஒழுக்கநூற் பாகுபாடு. அறம் எனவே, இல்லறம் துறவறம் இரண்டும் அடங்கும். துறவறம் — வீட்டுநெறி.

அறம்பொருளின்பம் வீடென்னும் பாகுபாடு தமிழரதே. ஆரியரே அவற்றைத் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டனர். அதோடு இப்போது வடசொற்களை மூலமாகவும் தென்சொற்களை மொழி பெயர்ப்பாகவுங் காட்டுகின்றனர். தமிழ்ப் பொருட்பாகுபாடுகளை யெல்லாம் இங்ஙனம் மொழி பெயர்த்துக் கொண்டு, மூலமாகக் காட்டுவது ஆரிய வழக்கம் என்க.

தமிழர் அறத்திற் சிறந்திருந்தமை, தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் அறவொழுக்கங்களா லறியப்படும்.

பொருள்களை அகம் புறம் என்று பகுப்பதே தமிழ முறையென்றும், அறம்பொருளின்பம் வீடென்று பகுப்பது ஆரிய முறையென்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு மொழியிலேயே நூலுக்கும் கலைக்கும் ஏற்றபடி, வெவ்வேறு வகையாய்ப் பொருள்கள் பகுக்கப்படும். இலக்கணநூல் ஒன்றிலேயே, எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்று மூன்று வகையாகவும், சொல்லதிகாரத்தில் பொருள் இடங் காலம் சினை குணம் தொழில் என்று ஆறு வகையாகவும், மற்றோர் முறையில் உயர்திணை அஃறிணை என்று இரு வகையாகவும் பொருள்கள் பகுக்கப்படுகின்றன. தருக்க நூலில் ஏழாகவும் பதினாறாகவும் பகுக்கப்படுகின்றன. ஆகையால், அகம் புறம் என்பது பொருளதிகாரப் பாகுபாடென்றும், அறம் பொருளின்பம் வீடென்பது ஒழுக்கநூற் பாகுபாடென்றும் அறிந்துகொள்க.

சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினையிடையுரி யென்றும், சொல்லியல் முறையில், இயல் திரி திசை வட சொற்களென்றும், ஒழுக்கநூலிற் பொய் குறளை கடுஞ் சொல் பயனில்சொல்லென்றும், கொண்முடிபு (சித்தாந்த) நூலில் வேறுவகையாகவும் பகுக்கப்படுகின்றன. இங்ஙனமே பொருள்களுமென்க.

ஆரிய நூல்களை முற்படியாக வைத்துக்கொண்டு தமிழ் நூல்களுக்குப் பொருளுரைப்பவரெல்லாம், எவ்வகையேனும் தவறவே செய்வர். திருக்குறள் தனித்தமிழ் முறையில் இயற்