பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

5

அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறுபட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணி யாளரைப் (Archbishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலாளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக்காரரையும் சூத்திரரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தாரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராமணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப்படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கேயுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரையும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம். ஆரிய திராவிட வரண வேறுபாட்டைப் பின்னர்க் காண்க:

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றனரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.

தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருதுகின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயுமிருக்கின்றது.