பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

7

மணிமேகலையில், 'வடமொழியாளர்' (5:40) என்று பார்ப்பனர்க்கும், 'வடமொழியாட்டி' (13:78) என்று பார்ப் பனிக்கும் வந்திருத்தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப்பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரினின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு 'வடமொழி' யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக 'வடவர்' 'ஆரியர்' என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத் திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள படி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ்நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா:

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சி யில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறு பட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.