பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்

________________


ஆற்றல் கொன்ற தென்னுங் கதையாலும், பிள்ளையார் என்ற தெய்வம் தோற்றுவிக்கப்பட்டது. கணபதி (தகணங்களுக்குத் தலைவர்) என்னும் பெயர் சிவனுக்கும் ஏற்றலாலும், சிவனுக்கும் பிள்ளையாருக்கும் முக்கண் கூறப்படுவதாலும், அவ்விருவரும் ஒருவரே யென்பதுணரப்படும்.

இங்கனமே பிறதெய்வங்களும் ஒவ்வோர் காரணம் பற்றித் தோற்றுவிக்கப்பட்டனவாகும்.

பிள்ளையார் வணக்கம் கடைக்கழகக்காலத்திற்கு முந்தி யிருந்ததாகத் தெரியவில்லை, முருகனுக்குப் பிள்ளையார் உதவினதாகக் கந்தபுராணங் கூறுவது களிறு தரு புணர்ச்சியேயன்றி வேறன்று.

சிவ பெருமானுக்குப் பகவன், ஐயன் என்று பெயர்களுண்டானமையின், காளிக்குப் பகவதி, ஐயை என்று பெயர்களுண்டாயின. பகவன் என்னும் பெயருக்கு அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்னும் அறு குணங்களையுடையவன் என்று பொருள் கூறப்படுகிறது. சிலர் பகம் என்பது குறி (இலிங்கம்) யென்றும், பகவடிவிற் குறிக்கப்படும் கடவுள் பகவன் என்றுங் கூறுகின்றனர். இருபாற்கூட்டத்தால் உயிர்கள் தோன்றுவதாலும், கடவுளிடத்தில் தாய்க் கூறும் தந்தைக் கூறும் உள்ளன என்னுங் கருத்தில், சிவபிரானை அம்மையப்பன், மாதொருபாகன், மங்கைபங்கன் முதலிய பெயர்களால் அழைப்பதாலும், வழிபடப்படும் சிவவுரு இலிங்கப் பெயருள்ள தாயும் இலிங்க வடிவ மாயுமிருத்தலாலும், எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒரு மூல ஆற்றலைக் குறி' வடிவால் முன்னோர் குறிப்பித்தார் என்று கொள்ளல் பொருத்தமானதே.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு". (குறள், 355)

காளி துடுக்கு நிலையளாதலின், அமைந்த நிலைக்குரிய தேவிவடிவம் சிவன் என்பதின் பெண்பாலான சிவை என்னும் பெயராற் குறிக்கப்பட்டது. சிவையைப் பார்வதியென்பர் வடநூலார்.

சிவை பர்வதவரசன் மகளாகிப் பார்வதியென்று பெயர் பெற்றதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால், குறிஞ்சித் தேவி என்று பொருள்படும் மலைமகள் என்னும் பெயரையே, மலைக்கு மகள் எனப் பிறழவுணர்ந்து அக்கதைகட்டப்பட்டதோ