பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்

62

(6) அதிவீரராமபாண்டியன்.

“எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார்”

(7) சித்தர்.

சிவவாக்கியர்

“மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபோத மாயுருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே”

பத்திரகிரியார்

“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம்.”

அகஸ்தியர் :

“தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
     தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற வமுதமதைப் பானஞ் செய்து
     தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கு
     ஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும்
நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும்
     நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே.”

பாம்பாட்டிச் சித்தர்

“சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம்”

இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதும், பார்ப்பனர் ஆரியரே என்பதும், வெள்ளிடை மலையாதல் காண்க. பார்ப்பனர் — அபார்ப்பனர் என்று பிரித்து, ஒரு மன்பதை மற்றொரு மன்பதையை வெறுப்பது விலங்குத் தன்மையே. ஆனால், இவ் வெறுப்பை நீக்குவதற்கு, அவ் விரண்டையும் இசைக்கும் வழிகளைக் கையாடவேண்டுமேயன்றி, ஆரியரும் திராவிடரும் ஒரு குலத்தாரென்பதும், பார்ப்பனர் தமிழரேயென்பதும், தமிழ்வடமொழியினின்றும் வந்தது என்பதும் தவறாகும். இதனால், குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology), சரித்திரம் (History) என்ற