பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஒரு கோட்டுக்கு வெளியே ...


“நீன்னா அடிக்கலாம். ஒனக்கு அண்ணன் தம்பி சொக்காரன் சொகக்காரன் இருக்கு. எனக்கு யாரிருக்கா? அவன் திருப்பியடிச்சா கேட்க நாதியில்லிய. இல்லாதவன் பொண்ணு எல்லாத்துக்கும் மயினிதான்.”

பாட்டி பிலாக்கணத்தைத் தொடர்ந்தாள்.

“அதத்தான் சொல்ல வந்தேன். இவா அதட்டிட்டா! ஒரு காலத்துல, பொம்பிள தப்பா நடந்தாலும் சரி, ஆம்பிள தப்பா நடந்தாலும் சரி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில மணல் மூட்டையை ஏத்தி, தெருத்தெருவா கொண்டு போவாங்க. இப்பப் பாரு, நீயே சொன்ன. ஒன்ன அவன் இடிச்சா, இவளுவ அவனுக்குத்தான் பேசுறாளுக.”

இன்னொரு பெண் குறுக்கிட்டாள். இவள் பீடிசுற்றத் தகுதியில்லாதவள் என்று ஒதுக்கப்பட்டவள்.

“அந்தக் கழுதகள ஏன் பேசுறிய? நம்மள இடிக்கயில இனிக்குது. இவளுக்கு எப்டி கசக்குமுன்னு நெனச்சிருப்பாளுக.”

“காலம் கெட்டுப் போச்சு. கன்னி கழியாதவளுங்களும் கஸ்மால முண்டையா போயிட்டாளுங்க.”

பேசிக்கொண்டிருந்த பெண்கள், திடீரென்று வேகவேகமாக நடத்துவங்கினார்கள். மாரிமுத்து நாடார் கொஞ்சம் வேகமாகவே நடந்து வந்தார். “என்னம்மா குறுக்கு வலிக்கி யெம்மா” என்று பாதி நிமிர்ந்த உலகம்மை, அப்பிடியே உடம்பைக் குனிந்து கொண்டாள். “எல்லாப் பொண்ணுகளயும் ஒட்டு மொத்தமா சொல்றது தப்பு பாட்டின்னு” சொல்ல வாயைத் திறந்த புஷ்பம், ‘பூ’ன்னு ஊதிக்கொண்டே நாற்றை எடுத்தாள். குத்துக்காலில் தலையைச் சாய்த்தபடி நின்றுகொண்டே துங்கிக்கொண்டிருந்த வெள்ளைச்சாமி “வயலுன்னு நெனச்சியா? ஒன் வைப்பாட்டின்னு நினைச்சியா? குத்துக் காலுல சாயுறியே, வயலு சீதேவி. மூதேவி இல்ல. மூதேவி!” என்ற வார்த்தைகளைக் கேட்டு, விழித்துத் திடுக்கிட்டானா, திடுக்கிட்டு விழித்தானா என்பது தெரியவில்லை. நாடார் பல்லைக்கடித்துக் கொண்டு நிற்பது மட்டும் தெரிந்து, வெள்ளைச்சாமி, நாற்றுக்கட்டுகளை எடுத்துக் கொண்டு நடவுப் பக்கம் ஓடினான்.

மாரிமுத்து நாடாரும் நடவுப்பக்கம் வந்தார். அறுபது வயதைத் தாண்டப் போகிறவர். ஆனால் வயதை மறைத்தது உடல் கட்டு. அந்த உடல்கட்டில் எட்டு முழ வேஷ்டி இறுகித்தழுவ, அரைக்கைசட்டை,