பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


புத்தரது வரலாற்றைக்கூறும்போதும் தாசரின் “ஆதிவேதத்”திலும் சீவக சிந்தாமணிப் பாடல்கள் பல இடம்பெறும். பொருத்தமான இடங்களில் அரிய பாடல்களைச் சேர்த்து ஆதிவேதத்தை ஒரு தமிழ்க் காப்பியமாகவே தருகிறார். சித்தார்த்தனின் திருமணத்திற்காக நகர் அணி செய்யப் பெற்றதை,

இரும்பிடி தழீஇய யானை இழிமதங் கலந்து சேறாய்ச்

சுரும்பொடு மணி வண்டார்க்குந்துகிர் கொடி மாடவீதி

பெருங்கடி நகரம் பேசின் இராச மா கிருகமென்பர்

அருங்குடி அமரர் கோமான் அணி நகராய தொன்றே

என்ற பாடல் கொண்டு வருணிப்பார். “சதுர் சத்ய காதை”யில் இறப்பினால் விளையும் துயரம் வீணானது என்பதை,

பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற்றழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடு கடல் வெள்ள மாற்றா

முரிந்த நம்பிறவி மேனாள் முற்றிழை இன்னு நோக்கால்

பரிந்தழுவதற்குப் பாவா அடியிட்டவாறு கண்டாய்

(அலாய்சியஸ் II 239)

என்ற பாடலால் விளக்குவார்.

உண்மையான புத்தன் என்போன் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு காட்டிக் கொல்லாமை எனும் அறத்தைக் கையாளுவோன் எனும் புத்த அறத்தை வலியுறுத்தும்போது,

ஊன் சுவைத்து உடம்பு வீங்கி நரகத்தில் உரைதல் நன்றோ

ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உரைதல் நன்றோ

ஊன்றி இவ் விரண்டினுள்ளும் உறுதி உரைதி என்ன

ஊன்றினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்

(அலாய்சியஸ் (II 268)

எனும் பாடலை இணைப்பார்.

ஒழுக்கத்தினின்று ஐம்பொறி காத்தலால் வீட்டின்பம் அடையலாம் என்பதற்கு,

ஒன்றாய ஊக்க வேர் பூட்டி யாக்கைக் கெறு வுழுது

நன்றாய் நல்வரகுச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர்

குன்றாமற்றாங் கொடுத் தைம்பொறியின் வேலி காத்தோம்பின்

வென்றார் தம் வீட்டின்பம் விளைவிக்கும் விண்ணோர் உலகின்றே

(அலாய்சியஸ் II 274)

எனும் பாடல் மேற்கோளாகும்.