பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சு.சமுத்திரம்

காரணமே இதன் மூலம் கிடைக்கும் மேலிட பரிச்சயத்தால், ஒரு நல்ல வேலைக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கைதான்... ஆனால், இந்த காவடி முருகன் தன்னை பழைய படியும் அன்னக்காவடி"யாக்கி விடுவானோ... நல்லவேளையோ, கெட்ட வேளையோ, மைதானத்தின் வாசற்பக்கம் நின்ற சின்ன அதிகாரிகள் பரபரத்து, அங்குமிங்குமாய் நகர்ந்தார்கள். உடனே மேடைப்பக்கம் நின்ற பெரிய அதிகாரிகள் வாசற்பக்கம் தலைவிரிகோலமாய் ஓடினார்கள். ஒரு சிலர் வாய்களில் கலெக்டர். கலெக்டர்... என்ற வார்த்தைகள் வெட்டுக்கிளியாய் துள்ளின. தானாய் புலம்பிக் கொண்டிருந்த போலீஸ் ஜீப் மேல் சாய்ந்து நின்ற கான்ஸ்டபிள்கள் அலறியடித்து ஓடினார்கள்... கலெக்டர் வருவதாக அனுமானித்த கூட்டத்தினர் கை வலிக்கும்படி தட்டினார்கள். கலைக் குழுக்கள் உஷாராயின... ஆனால் வந்தது ஒரு கழுதை... சின்ன அதிகாரிகளையும் மீறி பெரிய அதிகாரிகளை ஊடுருவி மேடைப்பக்கம் வந்துவிட்டது. ஒலிபெருக்கிகளில் சத்தம் போட்ட அந்த அரபிக் கடலோரம்" பாட்டை கேட்டோ அல்லது கூட்டத்தைப் பார்த்து மிரண்டோ, அங்குமிங்குமாய் துள்ளியது; அந்தக் கழுதை கூட்டத்தினருக்கு இந்தக் கால திரைப்பட நடனங்களை நினைவுப் படுத்தியிருக்க வேண்டும்... அந்த அப்பாவிப் பிராணிக்கு கைதட்டல்கள் கிடைத்தபோது, காவடி முருகன் அமைப்பாளரை மீண்டும் சீண்டினான்... "கழுதை, துவக்கி வச்சுட்டது சார்... போட்டியை நடத்தலாம் சார்...' அமைப்பாளர், ஆற்றுக்குள் திணிக்கப்படும் குடம்போல அரைகுறையாய் முக்கினார்... முனங்கினார்... ஆத்திரம் குரலை அடக்கியது. இதற்குள் மேடையின் இடதுபக்கம்