பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 சு.சமுத்திரம் 0

போய், ஆறாவது அறையில் நுழைந்தார்கள். அந்த எண்தான் ராசியான எண்ணாம்... ஆறும் மூன்றும் ஒன்பது... வெற்றி... வெற்றி... கலிங்கன்தான் இப்படி அவர் காதைக் கடித்தான். ஆனால் மயில்நாதனோ பல்லைக் கடித்தார். அழகை, அசிங்கமாக்க முடியும் என்பதற்கு அந்த அறையே ஒரு அத்தாட்சி... அங்குமிங்குமாய் பாட்டில்கள் குப்புறவும், நெடுஞ்சாண் கிடையாகவும் கிடந்தன. எச்சில் பொருட்கள் எங்கும் நிரம்பி, அந்த அறையே ஒரு குப்பைத் தொட்டிபோல் தோன்றியது... ஒரு வாலிபன் நாற்காலியில் உட்கார்ந்து காகிதம், காகிதமாய் எழுதுவதும், எழுதியதைக் கிழிப்பதுமாக இருந்தான்... இவரது வருகையை அங்கீகரித்து ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. வால்டேர், ரூசோ கூட இப்படி வேகவேகமாய் எழுதியிருக்க மாட்டார்கள். உலகையே தலைகீழாக மாற்றப் போகிற வேகம்... கலிங்கனிடம் விசாரித்தால் அவன், இரட்டை அர்த்த வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறானாம். கவுண்டமணியிடம் இருந்த 'பசக்காமெடி ஸ்டாக் தீர்ந்து விட்டதாம்... இன்னொருத்தன், ரெட்டை கட்டிலின் இடைவெளிக்கிடையே இருபக்கமும் கால், கைகளைப் பரப்பி குப்புறக் கிடந்தான். சிவப்பு லுங்கி கட்டியி ருக்கானோ... இல்லை... இல்லை... பிட்டத்தில் ஒரு துண்டு... மற்றபடி அம்மணம்... ஒரு கட்டில் பெட்டில் சின்னச் சின்ன வளையல் துண்டுகள்...

மயில்நாதன், இப்போது மனைவியை மனதிற்குள் திட்டிக் கொண்டே, அவளைக் கலிங்கன் வடிவில் பார்த்து கிட்டத்தட்ட கத்தினார்.

"இவர்தான் ஒங்க டைரக்டரா... இந்த ரூம்லதான் டிஸ்கஸனா..."

வெளியில போகப் போனவரை சுண்டிப்பிடித்தபடியே