பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சு.சமுத்திரம் ❍

பதிலே ஒரு சாட்சி பிரபோ... ஆட்சியின் கேடயமாய் விளங்கும் இந்த "அற்புத சிந்தனையாளர்களுக்கு உதவி வருவதாக தாங்கள் தம்பட்டம் அடிப்பது நியாயமில்லை, பெருமாளே... நிந்தாதுதி... என்பதும் ஒருவித பக்திதானே... மூலத்துடன் வேகவேகமாய் நெருங்குவதற்கான ஒரு யோக முறைதானே... இப்போது இதுவல்ல விவகாரம்... அது என்னவென்றால், எங்கள் தமிழ் இனத்தை, தாங்கள் ஒரேயடியாய் உழுதுவிட்டீர்கள் என்பதே... உங்களின் சித்து விளையாட்டிற்கு என் மக்கள்தானா கிடைத்தார்கள்? உலக நாதா? இவ்வளவுக்கும், நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஆழ்வார்களின் பாடல்களை நீங்கள் அறியாதவரா... இந்த ஆழ்வார் பெருமக்களைக் கருதியாவது என் மக்களை மாக்களாக்காது சும்மா இருந்திருக்கலாமே தாமோதரா..., இப்படி வேடிக்கைக் காட்டலாமா விண்ணளந்த பெருமாளே..."

ஆதிநாராயணனை, தாயார், "எங்கே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம் என்பதுபோல், வித்யாலட்சுமியாய் பார்த்தாள். உடனே, பாற்கடல் வாசன், பால் குடிக்கத் தெரியாத பூனைபோல் பார்த்து, புனுகாய் கேட்டார்.

"பழி சுமத்தாதே பைந்தமிழ் காவலா... உன் மக்களுக்கு எப்படி வேடிக்கைகாட்டுகிறேன் என்று எங்கே விரல்விட்டுச் சொல் பார்க்கலாம்..."

"விரல் மடக்கிச் சொல்ல... உங்களின் கோடி கோடி கரங்களே போதாது புண்ணியனே... ஆனாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறேன். எம் மக்கள், நல்லதைப் பேசி... அல்லதைக் கண்டிக்கும் பிசிராந்தையர்களாய் இருந்தவர்கள்...'மன்னவனும் நீயோ' என்ற கம்பர்களாய் இருந்தார்கள். 'நாமார்க்கும் குடியல்லோம்' என்ற