பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

சு.சமுத்திரம் ○


மரியாதையாய் கொத்தவிடு...அதுவும் சூட்கேஸ் வடிவத்தில் சுரங்கம் போடவிடு"...

ராசாளியின் இந்த கொந்தளிப்பில், நடுவில் நின்ற மயில்களில் சில அந்த மரத்திலேறி, மரங்கொத்திகள் கொத்துவதற்கு துணை புரிந்தன... பல மயில்கள் குயிலின் அணியில் சேர்ந்து கொண்டன... ஒரு சில பறவைகள் அங்கும் இங்குமாய் அலைமோதின. ஒரே குழப்பம் ஒரே சண்டை...

ஆனால், ஆடி அடங்கிப் போனது அந்த மாமரம்தான்... எதிரேயுள்ள தன்னைக் காக்கவேண்டிய பறவைகளோ, ஒன்றை யொன்று கொத்திக் கொள்கின்றனர்.. . மரங் கொத்திகளோடு சண்டை போடுவதைவிட, இந்தச் சண்டை அவைகளுக்கு சுவையாக இருந்தது... இதற்குள், ராசாளி 'கை' கொடுத்து விட்டதாலும், சில மயில்கள் சேர்ந்து விட்டதாலும், இடையில் ஒய்வெடுத்த மரங்கொத்திகள், முன்னிலும் வேகமாக அந்த மரத்தை கொத்தித் துளைத்தன. சீசன் முடியும் முன்னால் கொத்த வேண்டிய மிச்ச மீதியை, கொத்திவிட வேண்டுமென்ற வேகம்...

ஒரு தொழு நோயாளியைப் போல், அடிவாரம், கிளைகள், கொப்புகள் என்று அத்தனையிலும் கொப்பளங்களாகவும், பட்டை போன சதைகளாகவும், சதைபோன எலும்பு களாகவும் தோன்றும் அந்த மாமரம், கண் முன்னாலேயே போரிடும் அந்த இருபெரும் பறவை அணிகளை பார்க்க மனமில்லாது, தென் மேற்கேயுள்ள தென்னை மரத்தை அழுது அழுது பார்த்தது... ஆறுதல் தேடி கேட்டது...

"ஒரு காலத்தில் எல்லா மரங்களையும் ஆண்ட, பரம்பரையில் வந்த எனக்கு, ஏற்பட்ட கதியைப் பார்த்தாயா தென்னை நண்பனே"...