பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பின்னோக்கிய ஒட்டம்

    மாண்புமிகு முதல்வர், புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது என்ற செய்தி, அகில, இந்திய அளவில் பரவலாகவும், தமிழகத்தில் வீடு வீடாகவும் பரவிவிட்டது.
   இந்த அதிசயத்தைத் தரிசிப்பதற்கு, தமிழர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்? கூட்டமென்றால் கூட்டம், அப்படிப்பட்டக் கூட்டம். நாகையில் அன்னை வேளாங்கன்னி திருவிழாவின் போதோ, திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தின் போதோ, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதோ, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போதோ கூடாத கூட்டம்; இன்னும் சொல்லப் போனால், இந்த அத்தனை கூட்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் அவற்றைவிட பருமனான நெட்டையான கூட்டம். ஒவ்வொரு மனிதரும் ஓர் துளியானது போன்ற மனித சமுத்திரம்; அம்மா, அப்பா, அக்கா, தங்கை, வேலை, வெட்டி-ஆகிய அத்தனை பேரையும், அத்தனையையும் உதறிப்போட்டுவிட்டுப் போன அடியார் திருக்கூட்டம்.
   அந்த 'வாழ்ந்து கெட்ட' கிராமத்தை விழுங்கி, அதற்கு முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் மக்கள் வெள்ளம் வியாபித்தது. எதிர்பார்த்த இந்தக் கூட்டத்தைத்