பக்கம்:ஒரே உரிமை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கைமேல் பலன்



'கொக்கரக்கோ' என்று கோழி கூவிற்று. சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான். அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

இன்னெரு முறை கோழி கூவிற்று.

அவன் மீண்டும் ஒரு முறை தன் மனைவியைப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நாளெல்லாம் நாய் மாதிரி உழைச்சுப்பிட்டு வருகிறாள், பாவம்? உடம்பெல்லாம் ஒரே அசதியாயிருக்காதா? எப்படி இம்புட்டுச் சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியும்?” என்று தனக்குத் தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டான்.

மீண்டும் கோழி கூவிற்று.

சின்னப்பன் தன் மனைவியை லேசாகத்தீண்டி, “செல்லம், செல்லம்!” என்றான்.

செல்லம் திடுக்கிட்டு எழுந்து, “என்ன, பொழுதா விடிந்துவிட்டது” என்றாள்.

“இல்லை, இப்பத்தான் கோழி கூவிற்று” என்றான் சின்னப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/81&oldid=1149330" இலிருந்து மீள்விக்கப்பட்டது