கருவேப்பிலைக்காரி
95
கருவேப்பிலைக்காரி வந்தாள். அவளை அழைத்துத் திண்ணை யண்டை விட்டுவிட்டு, நான் உள்ளே சென்றேன் ஒரு பிடி அரிசி கொண்டு வருவதற்காக.
தனிக் குடித்தனம் செய்வதில் செளகரியம் இருந்தாலும், அசெளகரியமும் இல்லாமற் போகவில்லை. தினந்தோறும் கடைக்குப் போய்வர அவருக்குச் செளகரியப்படுகிறதா, என்ன? அவர் கடைக்குப் போய்வர முடியாத நாட்களில் எனக்குத் தெருவோடு போகும் அங்காடிக் கூடைக்காரர்களை விட்டால் வேறு வழியே கிடையாது.
***
"ஏ, அம்மா! நேரமாவுது, அம்மா; சீக்கிரம் வா, அம்மா!" என்றாள் கருவேப்பிலைக்காரி.
"என்னடி, அப்படிப் பறக்கிறே? அரிசி எடுத்துக் கொண்டு வர வேண்டாமா?" என்று சொல்லிக் கொண்டே நான் வெளியே வந்தேன்.
"ஐயோ! காத்தாலே பொறப்படறபோதே, அவரு 'சீக்கிரமா வா!'ன்னாரு. நேரம் கழிச்சுப் போனா அவரு என்னை அடிச்சுக் கொன்னுப் பிடுவாரு. அம்மா!"
"அது யாரடி, அவர்?"
"எம் புருஷன், அம்மா!"
"ஏன், அவன் எங்கேயாவது வேலை வெட்டிக்குப் போவதில்லையா?"
"சரித்தான்; அவரு எங்கேயாச்சும் வேலை வெட்டிக்குப் போவாம, வூட்டிலே சும்மாக் குந்திக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லையே! அடிக்கொரு தரம் எங்கேயாச்சும் திருடி