பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6I

விட்டான். இந்த நிலையில்தான் 'இறப்பா பிழைப்பா' என்ற இழுபறி நிலையில் ஒலிம்பிக் பந்தயங்கள் இருந்தன.

நீரோவினால் மக்கள் நெஞ்சங்கள் புண்ணாயின. மன்னனின் மாபாதகச் செயலாலும், மக்களுக்கு மதத்தின் மேல் இருந்துவந்த பிடிப்பும் துடிப்பும் நழுவிப் போனதாலும், ஒலிம்பிக் பந்தயங்கள் சரிவர நடைபெறவில்லை. கிரேக்கன் ஒருவன் வெற்றி வீரனாக வரக் கூடிய வாய்ப்பை ரோம் நாட்டினர் அளிக்கவும் இல்லை. அனுமதிக்கவும் இல்லை. ஆட்சியாளருக்கு முன்னால், ஆற்றலும் திறமையும் போட்டியிட முடியவில்லை, இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. நீரோவுக்குப் பின் வந்த ரோம் நகரை ஆண்ட மன்னனை “முதலாம் தியோடசிஸ், என்பவன், மத எரிச்சலின் காரணமாக, கி.மு. 394-ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தைத் தடை செய்தான்.

காலங் காலமாக, கிரேக்கர்களால் 292 முறை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் பந்தயங்கள் மன்னன் இட்ட சட்டத்தால் மறைக்கப்பட்டன. புனிதமான விழாவும் ஆழப் பெருங் குழியில் இட்டுப் புதைக்கப்பட்டது. பந்தயம் மட்டும் நிறுத்தப்படவில்லை பந்தய மைதானத்திலே புனிதத்தின் திருவுருவாக வைத்துக் காக்கப்பட்ட சீயஸ் சிலை, பந்தயம் நிறுத்தப்பட்ட மறு ஆண்டே (கி.மு. 339) உடைக்கப்பட்டது,

விழா நிறுத்தப் பெற்ற பிறகு, நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், `இப்படி ஒரு அதிசயமான பந்தயம் அவனியிலே. இருந்ததா' என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்குமளவுக்கு, மறையத் தொடங்கின. கோதர்கள் (Cotha) அடிக்கடி படையெடுத்து வந்து கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.