பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஔவையார் தனிப்பாடல்கள்


எண்ணமுடன் பிறர் செய்த சூதாகவும், அவன் அந்த அழைப்பைக் கருதலாம் அல்லவா? மேலும் மலையமான்கள் தமக்குப் பேரூதியம் தருபவர்க்குப் படைத்துணை செல்லும் இயல்பினராகவும் இருந்தனர். அதனால் அவன் தன் நாட்டைவிட்டு அவ்வளவு தூரம் வருவது என்பதும் சிந்திக்கக் கூடியதே. அதனால் ஒளவையும் அவனுக்கு எவ்வகை இடையூறும் நேராதென உறுதி கூறுகின்றார்.

சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக உட்காதே - பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசர் மனமிசைந்தார்
சங்கவையை யுங்கூடத் தான்.

“சேர நாட்டவர்களின் கோமானாகிய சேரவனே! செழுமையும் அழகும் உடைய திருக்கோவலூர் அளவிற்கும் நீ வருவாயாக நடந்ததனை எண்ணி மனம் உளையாதே! பாரி மகளான அங்கவையை மணந்துகொள்ள அரசர் மனம் இசைந்துவிட்டனர். சங்கவையையும்கூட மணந்துகொள்ள இசைவு தந்துவிட்டனர்” என்பது பொருள்.

23. புகார் மன்னன் வருக!

கோனை வருமாறு ஒலை அனுப்பியதுடன் பிற முடி வேந்தர்களுள் ஒருவனான புகார் மன்னனையும் திருமணத்துக்கு அழைத்து ஓலை விடுக்கின்றார், ஒளவையார்.

சோழன் வளமான நாட்டிற்கு உரியவன். தான் முடியுடை மூவேந்தரினும் சிறந்தோன் என்ற நினைவும் அவனிடத்தே இருந்தது. அதனால் அவன் பாரி மகளிர் திருமணத்திற்கு வருவது என்பது ஐயமானது என்றனர் சிலர்.

சோழன் வந்து பாரியின் மகளிருடைய திருமணத்தில் கலந்து கொள்வதாவது? குறுநில வேந்தனின் மகளிர் அவர் தன்னால் கொன்றொழிக்கப்பெற்ற பகைவனின் மக்கள் அவர் மணந்து கொள்பவரோ மலையமானின் மக்கள்; மலையனும் சோழ நாட்டிற்கு நட்பினன் அல்லன். எனவே, அந்தத் திருமணத்திற் கலந்துகொள்வது தகுதி உடையதன்று என்று சோழன் நினைப்பான். எனவே, ‘அங்ஙனம் நினைத்து வராமல் இருந்துவிடாதே' எனவும் தம் ஓலையிற் குறிப்பிடுகின்றனர் ஒளவையார்.

"புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து - நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியல் பதினெட்டாம் நாள்"