பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஔவையார் தனிப்பாடல்கள்



சிறுவன் நாவற்கிளையை நன்றாக உலுக்கினான். பொல பொலவெனக் கனிந்த பழங்கள் உதிர்ந்தன. ஒவ்வொன்றாகப் பொறுக்கி, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை ஊதிப் போக்கிவிட்டுத் தம் வாயில் இட்டுக் கொண்டிருந்தார் ஒளவையார்.

"பழம் நிரம்பச் சுடுகிறதா பாட்டி! நன்றாக ஊதி ஊதிச் சாப்பிடு!” என்று சொல்லிக் கலகலவென எள்ளற் சிரிப்புச் சிரித்தான் சிறுவன்.

ஒளவையார், ஒரு கணம் திகைத்தார். சிறுவனின் குறும்பான புத்திநுட்பத்திற்குத் தாம் தோற்றதை நினைத்தார். தம் தலையை மேலே நிமிர்த்தினார்."நான் உனக்குத் தோற்றேன் தம்பி! நீ நன்றாக வாழ்க!” என்று வாழ்த்தினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்.

"உறுதி மிகுந்த கருங்காலிக் கட்டையைப் பிளப்பதற்குப் பின்னிடாத கோடாரியானது, எளிதாக ஒடியும் வாழைத் தண்டினைப் பிளப்பதற்கு முடியாமல் தோற்றுப் பின்னடையும். அதனைப்போலப் பெரிய இந்தக் காட்டிடத்தே, எருமை மாடு மேய்க்கின்ற இச் சிறுவனுக்கு நான் தோற்றுவிட்டேனே! என் கண்கள், இனி இரண்டிரவுகளுக்கு உறங்க மாட்டாவே" என்பது பாட்டின் பொருள்.

தம்முடைய அந்த அறிவுத் தோல்வியை ஒளவையாரால் எளிதாக மறக்க முடியவில்லை. அந்த வேதனை அனுபவத்தை அவராகவே உரைத்தது இச் செய்யுள்.

அப்போது, அங்கே மயில்வாகனன் மந்தகாச நகையுடன் தோன்றினான். அவனைப் பணிந்து போற்றினார் ஒளவையார். அவனும் மகிழ்ந்து, அவரை வாழ்த்தி நிற்கின்றான்.

55. கொடியது எது!

முருகன் ஞான பண்டிதன், தமிழ் தந்த தயாபரன்! அவன், தமிழ் மூதாட்டியான ஒளவையாரைத் தனக்குச் சில உண்மைகளை விளக்கிக் கூறுமாறு கேட்கிறான். அவன் கேள்விகளுள் முதலது, “உலகிற் கொடியது எது?” என்பது.

"வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்விற்குத் தேவையான வளம் எல்லாம் அவனிடத்து நிரம்பியிருக்க