பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

87


வாழ்ந்து வருதலே இன்பம். பரம்பொருளை நினைவிற்கொண்டு அறம் பொருள் இன்பமாகிய இவற்றின் பால் கொள்ளும் பற்றினை விட்டுவிடுவதே வீடு ஆகும். அதுவே நிலையான பேரின்பம் தருவதும் ஆகும்."

63. எவையும் போம்!

சின்னஞ்சிறு மகவாக உலகிலே பிறக்கின்றோம். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து பெரியவர்களும் ஆகின்றோம். அந்தத் தாயின் அன்பு அளவிடற்கும் அரியது. தன் குழந்தையைப் பேணி வளர்ப்பதில் அவளுடைய கருத்து முழுவதும் சென்றிருக்கும்.

உணவு உடலுக்கு ஆக்கந்தருவது, அறுசுவையோடும் கூடிய உணவில், எது உடலுக்கு நலந்தரும் என்றறிந்து கொள்வது நல்லுடலுடன் வாழ்வதற்கு உதவும். தாயோடு இந்த உணவும், இதனால் பெறுகின்ற பயனும் இல்லாமற் போய்விடும்.

உடலை வளர்க்கும் தாயன்பு என்றால், உள்ளத்தை வளர்க்கும் கருவியான கல்வி நலத்தைத் தருவது தந்தையின் செயலாக இருக்கிறது. தந்தையின் பராமரிப்பு இல்லாமற் போனால், கல்வி பெறும் வாய்ப்பும் அறவே போய்விடும்.

'செல்வம்' என்று போற்றத்தக்கது மக்கட்பேறு ஒன்றுதான். பிற செல்வங்கள் நிலையாமை உடையன. மக்கட்பேறோ தொடர்ந்து நிலைபெற்று நிலையான சிறப்பைத் தருவது. அதனை இழந்தால், செல்வ நலனை இழந்ததாகவே கருதுதல் வேண்டும்.

'சமூகம்' உற்றார் உறவினருடன் கூடிக் கலந்து வாழ்வது. கூடிக்கலந்த வாழ்வு இல்லையானால், வாழ்வில் சுவை என்பதும் இல்லாமல் போகும். இதனால் மாயமான வாழ்வு நலனும் உற்றாரை இழந்தபோது ஒழிந்து போய்விடும்.

உற்றவிடத்து உறுதுணையாக் உதவுவது 'தோள்வலி' எனப்படும். உடன்பிறந்த சகோதரர் இருக்கும்வரைதான் ஒருவனுக்கு தோள்வலி உளதாயிருக்கும். சகோதரர் இல்லாது போனால், தோள்வலியும் இல்லாமற் போகும்.

ஒருவனுடைய வாழ்வின் பிரியாத் துணையாக, இல்லத்து அரசியாக, இன்பத்து நாயகியாக விளங்குபவள் அவனுடைய மனைவியாகும். அவள் அப்படி இல்லையானால், எத்தகைய இன்ப நலனும் அவன் வாழ்விலே இல்லாது போய்விடும். இந்த உண்மைகளை எல்லாம் கூறுகிற செய்யுள் இதுவாகும்.