இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலையும் வாழ்வும்
உலகம் தோன்றிய நாள் தொட்டுக் கலையும் வாழ்கின்றது. மக்கள் வாழ்வு மலராததன் முன்னரே, இயற்கைத் தேவன் எழிலார் கலையை உண்டாக்கி வாழ வைத்திருக்கின்றான். வண்ணப் படங்களின் கற்பனையையும் கவினையும் கண்டு, அவற்றைத் தீட்டிய கலைஞனை நாம் வியந்து போற்றுகின்றோம். ஆனால், அவன் வண்ணத்துக்கும் கற்பனைக்கும் கருவூலமாய் நின்று, அவற்றைத் தோற்றி வளர்த்த இயற்கைக் காட்சிகளை நாம் அவ்வளவாகப் போற்றவில்லை என்று சொல்லலாம். சலசலத்து ஓடும் கானாறுகளிலும், படர்ந்த கடல் வெளியிலும், வானேங்கிட மலைக் காட்சிகளிலும் கடவுளைக் கண்ட அன்பர் பலர். அதைப் போன்றே அப்பொருள்களில் கலையையும் கண்டு, கனிந்து கனிந்து பாட்டிசைத்த பாவாணர் பலர் நம் நாட்டில் அன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். உலக மொழிகள் அனைத்திலும் இக்கலைகளைப் பற்றிய நல்ல எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால்,