பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ?

கூடவே மடிவ தன்றிக் கொடுக்கயாம் ஓட்டோம் என்றார்.” 18

என்று சேக்கிழார் அன்று சமுதாயம் சென்ற நெறியை நன்கு விளக்கிக் காட்டுகின்றார். ஆம்! அன்று எதிர்த்தவர் அச்செயலை இகழ்ந்ததோடு விடாது, அதைத் தடுக்க முன்னின்று, அதனால் தாம் மடிய நேரினும் பின் வாங்கப் போவதில்லை என்றார்கள்; அப்படியே செயலிலும் காட்டினார்கள். இன்று எத்தனையோ பேர், ‘கொள்கைக்காகக் கூட்டோடு மடிவோம்!’ என்று கூறிக் காலம் வரும்போது தம் கொள்கையைக் காற்றில் விட்டுத் தமக்குப் பயனைத் தேடிக்கொள்வதைக் காண்கின்றோம். இவ்வாறன்றி, இயற்பகையார் செயலை அவர்தம் சுற்றத்தார் கண்டித்துப் போரிட்டு, இறந்தும் பட்டனர் என்பதை எண்ணுங்கால், அச்செயல் சமுதாயத்தால் அன்றே எவ்வளவு வெறுக்கப்பட்ட ஒன்றாய் இருந்தது என்பது தெரிகிறது. இவ்வாறு உண்மையை உள்ளபடி உலகுக்குக் காட்ட எத்தனையோ மேற்கோள்கள் பெரியபுராணத்திலிருந்து காட்டமுடியும். ஆயினும், இன்று அந்தப் பணி எனக்கு இல்லையாதலின், இந்த அளவோடு இதை நிறுத்தி, மேலும் அவர் நூல் எவ்வாறு செல்வமாக நிற்கின்றது என்பதைக் காணலாம்.

தமிழ் இலக்கியங்கள் செல்லும் செல்வச் செறிவோடு இந்தப் பெரிய புராணமும் செல்லுகிறது என்னலாம். பெருங்காப்பியத்துக்குத் தேவையான அத்தனைச் சிறப்பியல்புகளும் இதில் அடங்கியுள்ளன. கதைகள் தனித்தனியாக வெவ்வேறு வரலாற்றை விளக்குவனவாய் அமைந்த போதிலும், எல்லா வரலாற்றிலும் ‘அன்பு’ என்ற அடிப்படையே மணியிடை நூல் போல அமைந்திருப்பதைக் காணலாம். அன்பு ஒன்றினாலேயே அடியவர் அனைவரும் தத்தம் செயலாற்றுகின்றார்கள் என்பதைப் பயில்வோர் நன்கு அறிவர். அடியவர் பெருமையைக் குறிக்க வந்த சேக்கிழார் முதலிலேயே

‘ஈர அன்பினர் யாதும் குறைவிலர்

வீரம் எம்மால் விளம்பும் தகையதோ?’