அவன்மீது ஏதோ ஸ்பரிசம் பட்டது அவனுடைய நினைவிற்கு வந்தது.
‘யாரது, மச்சானா? இந்த மழையிலேயும் காத்திலேயும் ஏதுக்கு இங்கிட்டு வந்தே?’
‘மச்சான் வள்ளி எங்கே? அதைக் காணவேணும் போலேயிருக்கு. எங்கே?’
‘மரத்து ஒண்டலிலேதானே படுத்திருக்கும் எப்பவும்?’
‘அங்கிட்டுக் காணலையே.’ இதைக் கேட்டதும் இடியால் தாக்குண்டவன் போல ஜூரம் என்ற நினைவுகூட மறந்து அப்படியே எழுந்து உட்கார்ந்தான் செல்லையா.
‘மச்சான், இனிமே என்னைப்பத்தி மறந்திடுங்க. நான் திருடன். என்னமோ தோணிச்சு. புத்தியில்லாமத் திருடிப்பிட்டேன் ஒரு சேலைக் கடையிலே. கடைசியா அம்பிட்டுக்கிட்டேன்’ என்று வார்த்தைகளை முடித்துவிட்டுக் கையில் மாட்டப்பட்டிருந்த விலங்குகளை மேலே உயர்த்தினான்.
‘ஐயோ, திருடனா?’ செல்லையா ஸ்தம்பித்துவிட்டான்.
‘ஊம். நாழி ஆகிவிட்டது. ஜல்தி’ போலீஸ்காரன் அதிகாரத்துடன் உத்தரவிட்டான்.
‘எசமான், நீங்க ரொம்ப நல்லவங்க. வள்ளிய ஒரு தரமாச்சும் பார்த்துப்பிட்டு வந்துடறேன். கொஞ்சம்...’ என்று கெஞ்சிக் கும்பிட்டான்.
அதே சமயம் ‘ஏய்’ என்று அலட்டும் சப்தம் கேட்டுத் திரும்பினான். கையில் விளக்குடன் இரண்டு பேர் வந்து நின்றார்கள். அதன்பின் சிலர் தாங்கள் தூக்கிவந்த உருவத்தை மெதுவாகத் தரையில் கிடத்திவிட்டு ‘ஏய், இந்தக் குட்டி உன் தங்கச்சியா? செத்த முந்தி கொட்டற மழையிலே ஓடியாந்து அண்ணனுக்கு ஜூரமின்னு சுடுசோறு கேட்டுச்சு. சோறு போட்டதும் போயிருக்குது. திடுமின்னு யாரோ அலறும் சத்தம் கேட்டு ஓடிப் போய்ப் பார்த்தோம். இது தரையிலே சுருண்டு கிடந்துச்சு. அப்பத்தான் பாம்பு ஒண்ணு ஓட்டமா ஓடிச்சு. ஐயோ! விரியம் பாம்பு மாதிரி